Published : 11 Apr 2020 05:56 PM
Last Updated : 11 Apr 2020 05:56 PM

விஜய் டிவி எங்களைப் புறக்கணித்துவிட்டது: 'லொள்ளு சபா' இயக்குநர் வேதனை

விஜய் டிவி எங்களைப் புறக்கணித்துவிட்டது என்று 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை இயக்கிய ராம்பாலா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் சந்தானத்தை நாயகனாக வைத்து 'தில்லுக்கு துட்டு' மற்றும் 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய படங்களை இயக்கியவர் ராம்பாலா. இரண்டுமே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தனது அடுத்த படத்துக்காகக் கதை எழுதி வருகிறார்.

படங்கள் இயக்குவதற்கு முன்பு ராம்பாலா இயக்கத்தில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நிகழ்ச்சி மிகவும் பிரபலம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சி மூலம்தான் சந்தானம், ஜீவா, சுவாமிநாதன், மனோகர் உள்ளிட்ட பலரும் பிரபலமானார்கள்.

தற்போது, கரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் பழைய ஹிட்டடித்த நிகழ்ச்சிகள், சீரியல்கள் என ஒளிபரப்பு செய்து வருகின்றன. இதில் விஜய் தொலைக்காட்சி மீண்டும் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை காலை 7.30 மணியளவில் ஒளிபரப்பு செய்து வருகிறது.

மறுஒளிபரப்பு தொடர்பாக இயக்குநர் ராம்பாலா பேட்டி அளித்துள்ளார்.

" 'லொள்ளு சபா'வுக்குப் பிறகான வாழ்க்கை எப்படியிருக்கிறது" என்ற கேள்விக்கு, "சேனல் எங்களைப் புறக்கணித்துவிட்டது. அதுதான் கசப்பான உண்மை. வெற்றிகரமான நிகழ்ச்சியை நடத்தியும் எங்களுக்கான அங்கீகாரம் எந்த வகையிலும் (சேனலிடமிருந்து) கிடைக்கவில்லை. அதனால்தான் நான் எந்தப் படம் எடுத்தாலும் அதில் 'லொள்ளு சபா' அணியினர் இடம் பெறுவதை உறுதி செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ராம்பாலா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x