

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சரி செய்ய, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஊரடங்கால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுமே கடும் பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்து வருகிறது.
பொருளாதார நெருக்கடி மட்டுமன்றி, கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்குமாறும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
தற்போது, தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் அளித்துள்ளது. முன்னதாக பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ 15 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழக அரசு, அதன் கோவிட் -19 பேரிடர் மேலாண்மைத் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சியில், தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் எனப் பொதுமக்களுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.