Published : 09 Apr 2020 01:52 PM
Last Updated : 09 Apr 2020 01:52 PM

நடிகர் சங்கத்துக்கும் உதவுங்கள்: முன்னணி நடிகர்களுக்கு உதயா உருக்கமான வேண்டுகோள்

பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்தது போல் நடிகர் சங்கத்துக்கும் உதவுங்கள் என்று முன்னணி நடிகர்களுக்கு உதயா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சத்தால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு சார்பில் நிதியுதவிகள் வாங்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு உதவ நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு, சுமார் 15 லட்ச ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இதற்கு நிதியுதவி வழங்க முன்வர வேண்டும் என்று அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் உதயா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”இன்று கரோனா வைரஸின் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய் நிற்பது தாங்கள் அறிந்ததே. உலகப் பிரபலங்களில் பில்கேட்ஸ்லிருந்து நமது நாட்டு அம்பானி, அதானி வரை பலர் பல லட்சம் கோடிகள் இழப்புக்கு ஆளாகி இருக்கின்றார்கள் என்று ஊடகத்தின் வாயிலாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதேசமயம் கரோனாவால் ஏற்பட்டிருக்கும் ஊரடங்கால் அன்றாட சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் எத்தனையோ பேர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பசிக்கும் பட்டினிக்கும் பரிதவிக்கும் பரிதாப நிலையும் இங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் அது எந்த அளவுக்கு போதுமானது என்றே தெரியவில்லை. பல தொழில்களைப் போல் திரைப்படத் தொழிலும் இதில் விதிவிலக்கல்ல.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்குப் பல முன்னணி நடிகர்கள் பல உதவிகளைச் செய்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. அதேசமயம் முன்னணி நடிகர்கள் செய்திருக்கும் உதவிகள் பெப்சி அமைப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே சென்றடையும். பெப்சி அமைப்பில் சேராத தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 3300 பேரில் 2500 பேர் துணை நடிகர்களாகவும் நாடக நடிகர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் படப்பிடிப்பிற்கோ, அல்லது நாடக அரங்கிற்கோ சென்றால் மட்டுமே சம்பளம் கிடைக்கும். அந்த வருமானத்தில்தான் அவர்கள் குடும்பத்தை வழிநடத்த முடியும். இந்த சூழ்நிலையில் ஒட்டுமொத்த ஊரடங்கால், துணை நடிகர்களும், நாடக நடிகர்களும் கரோனாவால் ஏற்படும் பாதிப்பை விடப் பசி பட்டினியால்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவிகள் கிடைக்க நடிகர் சங்க தனி அதிகாரியின் ஒத்துழைப்பின் பேரில் ஐசரி கணேஷ், நடிகர் கார்த்தி, நாசர், பொன்வண்ணன், குட்டி பத்மினி, பூச்சி முருகன், சூரி மற்றும் பல நல்ல உள்ளம் படைத்த நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற பண உதவியை அளித்துள்ளனர். அதன்படி வந்திருக்கும் தொகையோ 15 லட்சத்திற்குதான் இருக்கிறது. அதோடு பலரின் சிறு உதவியால் எங்களால் முடிந்த, கஷ்டப்படும் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு போன்றவற்றைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இருப்பினும் அனைவருக்கும் உதவிடப் பற்றாக்குறை இருக்கிறது. ஆகவே தயைகூர்ந்து பிரபல முன்னணி நடிகர்களுக்கு என் அன்பான வேண்டுகோள். நடிகர் சங்க உறுப்பினர்களின் பசியைப் போக்க அவர்களின் குடும்பங்கள் பட்டினி இருளிலிருந்து விலக, பெப்சி தொழிலாளர்களுக்கு அளித்தது போல் நடிகர் சங்கத்திற்கும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உதவும் உள்ளம் படைத்தவர்கள்.. தென்னிந்திய நடிகர் சங்க டிரஸ்ட் அக்கவுண்டுக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

The South Indian Artistes Association,

HDFC BANK

Saligramam Branch

Acno: 50100130847592

IFSC Code:HDFC0002082 ’’.

இவ்வாறு உதயா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x