Published : 09 Apr 2020 01:32 PM
Last Updated : 09 Apr 2020 01:32 PM

பிரபல பாலிவுட் தயாரிப்பாளருக்கு கோவிட்-19 தொற்று உறுதி

'சென்னை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானிக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கரீம் மொரானியின் இளைய மகள் ஷாஸா மொரானிக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மார்ச் முதல் வாரம் இலங்கையிலிருந்து திரும்பிய ஷாஸா மொரானிக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதேபோல ஷாஸாவின் மூத்த சகோதரியும் நடிகையுமான ஸோவா மொரானி, மார்ச் இரண்டாம் வாரத்தின்போது ராஜஸ்தான் சென்று திரும்பியுள்ளார். கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கும் கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் கரீம் மொரானியின் குடும்பம், வீட்டுப் பணியாட்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது கரீம் மொரானிக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையிலுள்ள நானாவதி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதை அவரது மகள் ஸோவா மொரானி உறுதி செய்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸோவா கூறியிருப்பதாவது:

''நான், என் தந்தை, என் சகோதரி மூவருக்கும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என் சகோதரி ஷாஸாவுக்கும் என் அப்பாவுக்கும் அறிகுறிகள் இல்லை. எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. தற்போது மூச்சுப் பயிற்சியும் வெந்நீரும்தான் மிகவும் உதவியாய் இருக்கின்றன. விரைவில் விரிவான தகவல்களைச் சொல்கிறேன். பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றிகள். விரைவில் வீட்டுக்குச் செல்லும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்''.

இவ்வாறு ஸோவா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x