Published : 07 Apr 2020 09:10 PM
Last Updated : 07 Apr 2020 09:10 PM

போலிச் செய்திகள்தான் உண்மையான பிரச்சினை: மகேஷ் பாபு

போலிச் செய்திகள்தான் உண்மையான பிரச்சினை என்று மகேஷ் பாபு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுக்கவே எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், தங்களுடைய ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரையுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இன்று (ஏப்ரல் 7) உலக ஆரோக்கிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் மகேஷ் பாபு.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"ஊரடங்கு அமலுக்கு வந்து இரண்டு வாரங்கள். நாம் வலிமையாக இதைக் கடைப்பிடித்து வருகிறோம். நமது அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

உலக ஆரோக்கிய தினமான இன்று, கோவிட்-19க்கு எதிரான போரில், நாம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும், களத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கு நன்றி சொல்வோம்.

இந்த சுகாதாரச் சிக்கல் இருக்கும் சூழலில், நம் உயிரை, அவர்களை உயிரை விட அதிகமாக மதிக்கும், தெருக்களில், மருத்துவமனைகளில் உழைக்கும் அனைத்து தைரியமான போர் வீரர்களுக்கும் என் மரியாதைகளும், வணக்கங்களும்.

உங்கள் அனைவரையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.

சமூக விலகல், சுகாதாரத்தைப் பேணுதலைத் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயத்துக்கும் நாம் கவனம் தர வேண்டும். அச்சத்திலிருந்து விலகல். அச்சத்தை ஏற்படுத்தும் மக்கள், செய்திகளிடமிருந்து நாம் விலகியிருக்க வேண்டும்.

போலிச் செய்திகள்தான் உண்மையான பிரச்சினை. தவறுதலாக வழிநடத்தும் தகவல்களிலிருந்து விலகியிருங்கள். இதைப் படித்துக் கொண்டிருக்கும் அனைவரும், நேர்மறை சிந்தனை, அன்பு, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றைப் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் புயலைக் கடந்து பயணிப்போம்.

வீட்டிலேயே இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள்".

இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

A post shared by Mahesh Babu (@urstrulymahesh) on

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x