ஊக்கத்தையும் அன்பையும் மறவேன்: எம்.கே.அர்ஜுனன் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

ஊக்கத்தையும் அன்பையும் மறவேன்: எம்.கே.அர்ஜுனன் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

Published on

ஊக்கத்தையும் அன்பையும் மறவேன் என்று இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பல படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் எம்.கே.அர்ஜுனன். 200க்கும் அதிகமான படங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும், மேடை நாடகங்களுக்கும் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

அர்ஜுனன் மாஸ்டர் என்று கேரள சினிமாவில் அன்போடு அழைக்கப்படும் எம்.கே.அர்ஜுனன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு கேரள முதல்வர் தொடங்கி முன்னணி மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதன்முதலில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பை வழங்கியவரும் இவரே. கடந்த 2017-ம் ஆண்டு இவரது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.

எம்.கே.அர்ஜுனன் மறைவு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

”ஒரு முறை கனிவு காட்டினாலும் அது வாழ்நாள் வரை நிலைக்கும். எனது சிறுவயதில் எனக்கு நீங்கள் தந்த ஊக்கத்தையும், செலுத்திய அன்பையும் என்றும் மறக்க மாட்டேன். உங்களது முடிவில்லா மரபுக்கு உங்களின் எண்ணற்ற பாடல்கள் அத்தாட்சி. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் எம்.கே.அர்ஜுனன் மாஸ்டர். அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் அனுதாபங்கள்”.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in