Published : 04 Apr 2020 12:37 PM
Last Updated : 04 Apr 2020 12:37 PM

கரோனா வைரஸ் அச்சம்: பெப்சி தொழிலாளர்களுக்கு நயன்தாரா 20 லட்ச ரூபாய் நிதியுதவி

கரோனா வைரஸ் அச்சத்தால் படப்பிடிப்பு இல்லாமல் வருமானமின்றித் தவிக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் நயன்தாரா.

கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் சின்னத்திரை, வெள்ளித்திரை என எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இந்த ஊரடங்கால் பெரும் சிரமத்துக்கு உள்ளான திரையுலகின் தினசரித் தொழிலாளர்களுக்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள்.

பெப்சி தொழிலாளர்களுக்கு உதவுமாறு திரையுலகப் பிரபலங்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் நிதியுதவி வழங்கினார்கள். மேலும், பல்வேறு தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் அரசி மூட்டைகள் தந்து உதவினர்.

இந்தப் பட்டியலில் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே பெப்சி தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு நிதியுதவி அளித்திருந்தார். தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்த நிதியுதவியில் ரஜினி மட்டுமே அதிகப்படியாக 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக அதிகப்படியான தொகையை நயன்தாரா கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x