Published : 03 Apr 2020 09:54 PM
Last Updated : 03 Apr 2020 09:54 PM

பிரதமர் மோடி வேண்டுகோள்: ட்வீட் செய்ததன் பின்னணி என்ன? - சாந்தனு காட்டமான விளக்கம்

பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததிற்குத் தான் ட்வீட் செய்ததன் பின்னணி என்ன என்று மீண்டும் சாந்தனு விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி 411 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே பிரதமர் மோடி இன்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வேண்டுகோளுக்கு ட்விட்டர் தளத்தில் மீம்ஸ்களைக் கொட்டி வருகிறார்கள். 'வைதேகி காத்திருந்தாள்' படத்தின் பெட்ரோமாக்ஸ் லைட் காமெடி, 'மகாபிரபு' படத்தின் காமெடி என மீம்ஸ்கள் பரவி வருகின்றன. பிரதமர் மோடியின் அறிவிப்பு குறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், 'சூரியன்' படத்தில் கவுண்டமணி நடனமாடிக் கொண்டே வரும் வீடியோவைப் பகிர்ந்து "ஏற்கெனவே 2-ம் இடத்தில் இருக்கிறோம். இப்படி நடக்காமல் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

உடனடியாக பாஜக ஆதரவாளர்கள் சாந்தனுவைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள். ஒரு சில பதிவுகளுக்குப் பதிலளித்து வந்தார். ஒரு கட்டத்தில் விமர்சனங்கள் அதிகரிக்கவே, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், "அதிக அளவில் மக்கள் வெளியே வராதீர்கள் என்று கோரிக்கை வைத்து ஒரு பதிவு. ஆனால் அனைவரும் அதை முஸ்லிம்களோடு இணைத்துப் பேசுகிறார்கள். நான் ஏன் பாஜகவைக் குற்றம் சாட்டுகிறேன்? 1. நாம் பாஜகவைப் பற்றிப் பேசவில்லை. 2. அட மதவெறி புடிச்சவங்களே.. எல்லா நாளும் ரோட்ல எல்லா மதமும் கும்பலா சுத்துது.. ஏன் ஒரு மதத்தை மட்டும் குற்றம் சொல்லவேண்டும்?" என்று தெரிவித்தார்.

ஆனாலும் தொடர்ச்சியாக சாந்தனுவை விமர்சித்துக் கொண்டே இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து சாந்தனது தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"பிரதமர் மோடியின் விளக்கு ஏற்றும் கோரிக்கை நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியது. நம்பிக்கை, ஒற்றுமை, நேர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை அது கொண்டுவரும். ஒரே கோரிக்கை என்னவென்றால் தயவுசெய்து போனமுறை கூட்டமாக வெளியே வந்து குழுமியது போல முட்டாள்தனமாக எதையும் செய்துவிடவேண்டாம் என்பதே. புரிந்துகொள்ளாத, பாதுகாப்பு உணர்வற்ற, அப்பட்டமாகக் குரைக்கத் தொடங்கியிருக்கும் முட்டாள்கள் இந்த பதிவைப் படியுங்கள். இதுதான் அதற்குப் பின்னால் உள்ள அர்த்தம்"

இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x