Published : 03 Apr 2020 12:30 PM
Last Updated : 03 Apr 2020 12:30 PM

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் கதைக்களம்: ராஜமெளலி தகவல்

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சத்துக்குப் பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. இதனிடையே,
இந்தப் படத்தின் கதைக்களம் என்ன என்பதை ராஜமெளலி அளித்துள்ள பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இது சுதந்திரத்துக்கு முந்தைய படம் என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டேன். அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமாரம் பீம் என்ற இரண்டு வரலாற்று நாயகர்களைப் பற்றிய திரைப்படம் இது. இருவருமே சுதந்திரப் போராட்ட ஆளுமைகள். ஆனால், நிஜ வாழ்வில் அவர்கள் சந்தித்துக் கொண்டது கிடையாது. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் இருவரின் வாழ்விலும் சுவாரஸ்யமான பல ஒற்றுமைகள் உண்டு. 1920களில் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டுச் சென்று விடுகிறார்கள். அவர்கள் எங்கே சென்றார்கள் என்பது யாருக்குமே தெரியாது. அவர்கள் மீண்டும் திரும்பி வந்து பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகச் சண்டையிட்டனர். அவர்கள் இருவரும் வாழ்வில் நடந்த பல விஷயங்கள் ஒரே மாதிரியானவை. இதைப் படிக்கும்போது இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு நண்பர்களைப் பற்றிய கதை இது".

இவ்வாறு ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x