Published : 02 Apr 2020 05:16 PM
Last Updated : 02 Apr 2020 05:16 PM

தந்தை மரணம், தாயின் நிலை, சகோதரனின் ஆதரவு: அமலாபால் நெகிழ்ச்சிப் பதிவு

நடிகை அமலாபால் மறைந்த தனது தந்தை மரணம் குறித்தும், தனது அம்மா மற்றும் சகோதரன் குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் புற்றுநோயால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மும்பையில் படப்பிடிப்பிலிருந்த அமலா, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள கொச்சி வந்திறங்கினார்.

தற்போது சமூக வலைதளத்தில் தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகான தனது சிந்தனைகள் குறித்தும், தனது தாய் மற்றும் சகோதரனின் பங்கு குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

"பெற்றோரில் ஒருவரை இழக்கும் உணர்வை விவரிக்க முடியாது. அது ஒரு பெரிய வீழ்ச்சி. தெரியாத ஒரு இருளுக்குள் செல்ல ஆரம்பித்துவிடுவீர்கள். வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை உணர ஆரம்பிப்பீர்கள். என் அப்பாவை கேன்சருக்குப் பலி கொடுத்தது எனது வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டியது. அது என்னைப் பல விஷயங்களை உணரச் செய்தது. இதோ அதில் ஒரு சிந்தனை.

நாம் ஒரு பெரிய அழகான உலகில் வாழ்கிறோம். அதே நேரம் இன்பமும் துன்பமும் இருப்பதைப் போல, நமது ஒவ்வொரு அசைவையும், சிந்தனையையும் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சமூக நெறிகளால் உருவாக்கப்பட்ட உலகிலும் நாம் வாழ்கிறோம்.

இளம் வயதிலிருந்தே நாம் கட்டுப்படுத்தப்பட்டு, நமக்கு நிகழும் மோசமான அனுபவங்களை மறைத்துக்கொண்டு, நமக்குள் இருக்கும் குழந்தையைப் பெட்டிக்குள் பூட்டி வைகிறோம். துரதிர்ஷ்டவசமாக, முந்திச் செல்லும் வாழ்க்கைப் பந்தயத்தில் நம் மீது நாம் எப்படி அன்பு செலுத்துவது என்பது குறித்து நமக்குப் பல சமயங்கள் சொல்லித் தரப்படுவதில்லை.

நமக்குள் இருக்கும் அந்தப் பெட்டிகளைத் திறந்து, அதில் அதிர்ச்சியால், கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைத்தனத்தைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். ஒரு உறவிலிருந்து மற்றொரு உறவுக்குத் தாவுகிறோம், நல்ல துணைக்கு ஏங்குகிறோம், நமக்குள் காணாமல் போயிருக்கும் அந்த இன்னொரு பாதியை மற்றவர்களிடத்தில், பொருட்களில், தொழிலில், தற்காலிக சந்தோஷங்களில், அனுபவங்களில் தேடுகிறோம். இது எல்லாம் நமது சுயத்திலிருந்து நாம் தப்பிக்க எடுக்கும் முயற்சிகளே. இதன் விளைவு, இன்னமும் அதிக வெறுமையை உணர்வதே.

நாம் எப்போது நம்மை முழுமையாக நேசிக்கப்போகிறோம்? நமக்குள் இருக்கும் இருட்டு, வெளிச்சம், நன்மை, தீமை, சோகம், சந்தோஷம், வெறுமை, பலவீனம், வலி, அச்சம் என அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் போகிறோம்?

ஆம், நான் இதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன், அதிகம் பயணப்படாத பாதையில் நடக்க முடிவெடுத்துவிட்டேன். இனிமேல் நான் தப்பித்துச் செல்ல மாட்டேன்.

அதி முக்கியமாக, நாம் வளர்ந்து கொண்டிருக்கையில் பார்த்த அந்தப் பெண்மணி, தன் குடும்பத்தைப் போலவே தானும் முக்கியம் என்பதை மறந்திருக்கிறார். பாதிப்பிலிருந்து மீள்வதை விடுங்கள், நம் அம்மாக்கள் அவர்களை நேசிக்க மறந்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் மொத்த வாழ்க்கையையும் கணவன், குழந்தை, குடும்பம் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ளச் செலவிடுகிறார்கள். அவர்களுக்காக ஏதாவது செய்துகொள்ள ஒரு கணமும் நின்றதில்லை.

அவர்கள் தங்களை மொத்தமாக இழக்கும் முன்னர் அவர்களுக்கு, அவர்களின் சுயத்தை நேசிக்க, போஷிக்கச் சொல்லித் தருவது, புரிய வைப்பது நமது கடமை.

மன அழுத்தத்துக்கு நானும் என் அம்மாவும் கிட்டத்தட்ட எங்களை இழந்துவிட்டோம். ஆனால் இதோ இப்போது, இங்கே, அன்பு மற்றும் (அதனால்) குணமடைந்ததால் ஃபீனிக்ஸ் பறவை போலத் தயாராகியிருக்கிறோம்.

தொடர்ந்து என்னை ஆதரித்து வரும் என் அன்பார்ந்த சகோதரனுக்கு நன்றி. முக்கியமான எனது சிறு வயது அதிர்ச்சிகரமான அனுபவங்களைச் சுவாரசியமானதாக மாற்றியதற்கும், தொடர்ந்து இன்றும் அதைச் செய்து வருவதற்கும் நன்றி. உடைந்த இதயங்கள் அனைத்துக்கும் நிறைய அன்பைத் தருகிறேன்".

இவ்வாறு அமலாபால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x