Last Updated : 30 Mar, 2020 01:43 PM

 

Published : 30 Mar 2020 01:43 PM
Last Updated : 30 Mar 2020 01:43 PM

முறையான பயிற்சியுள்ள நடிகையாக மாறியிருப்பது பிடித்துள்ளது: மனிஷா கொய்ராலா

முறையான பயிற்சியுள்ள நடிகையாக மாறியிருப்பது பிடித்துள்ளது என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் பிறந்த மனிஷா, நேபாளத்தின் 22-வது பிரதமர் பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலாவின் பேத்தி ஆவார், மேலும் 1991-ம் ஆண்டு வெற்றி பெற்ற 'சவுதகர்' மூலம் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தியில் 'தில் சே', 'பம்பாய்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்தி மட்டுமன்றி தமிழ், நேபாளி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர்.

சில ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார். 2012-ம் ஆண்டு அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமாகி, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

இதனிடையே, தான் நடிப்பை அணுகும் விதம் மாறியுள்ளதாக நடிகை மனிஷா கொய்ராலா பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"இதற்கு முன்னால் நான் நடித்த கதாபாத்திரங்களுக்கு, அதில் நடிக்கக் குறிப்பிட்ட திறன்கள் எதுவும் தேவைப்படவில்லை. ஆனால், இன்று நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்குத் தேவைப்படுகிறது. எனவே கூடுதலான உழைப்பை, முயற்சியைப் போட விரும்புகிறேன்.

உங்கள் முன் ஒரு சவால் இருக்கும்போது உங்கள் எல்லைகளை விரிவாக்கி அந்தப் பாதையில் சிறக்க முயற்சிப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். தன்னிச்சையாக அப்போதைக்கு அப்போது நடிப்பதிலிருந்து இப்போது ஒரு முறையான பயிற்சியுள்ள நடிகையாக நான் மாறியிருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. தன்னிச்சையான நடிப்போடு சேர்த்துப் பயிற்சியையும் ஒன்றாக்கினால் இன்னமும் சிறப்பாக இருக்கும். எந்த திறன்களைப் பட்டை தீட்டுவது, என் எல்லைகளை விரிவாக்குவது எனக்குப் பிடிக்கும்.

நடிப்புத் துறையில் வளர வேண்டும் என்றால் தொடர்ந்து புது விஷயங்களைக் கற்கவும், (அப்படி புதிதாகக் கற்க) கற்ற பழைய விஷயங்களை மறக்கவும் வேண்டியிருக்கிறது. மக்கள் உங்கள் நடிப்பைப் பாராட்டினால் அது உங்கள் தோள் மீது தட்டிக்கொடுத்தது போல. என்னைப் பாராட்டினால் நான் சந்தோஷமாக உணர்வேன். கதாசிரியரோ, ஓவியரோ, நடிகரோ, இயக்குநரோ, கலைஞர்களின் படைப்பே அது ரசிகர்களைத் தொடுகிறதா இல்லையா என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. அப்படித் தொட்டுவிட்டால் அது கலைஞர்களுக்குக் கூடுதல் ஆர்வத்தைத் தரும்.

நான் பசியுள்ள ஒரு நடிகை. இன்னமும் நடிப்பில் சிறக்க வேண்டும் என்று தொடர்ந்து முயல்கிறேன். எனது வளர்ச்சிக்கு உதவும் வாய்ப்புகள் எனக்குக் கிடைப்பதில் மகிழ்ச்சி. நான் என்றுமே எனது வேலையைத் திட்டமிட்டதில்லை".

இவ்வாறு மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x