Published : 26 Mar 2020 09:50 PM
Last Updated : 26 Mar 2020 09:50 PM

தங்களது தினக்கூலி பணியாளர்களுக்கு உதவிய 'நாந்தி' படக்குழு

தங்களுடைய படத்தில் பணிபுரிந்த தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் உதவியிருக்கிறது 'நாந்தி' படக்குழு,

21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், இந்தியா முழுக்க மக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். இதற்கு முன்பாகவே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், திரையுலகப் பிரபலங்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தினக்கூலி பணியாளர்கள் அனைவருமே கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், திரையுலக பிரபலங்கள் பலரும் தினக்கூலி பணியாளர்களுக்கு நிதியுதவிகள் செய்து வருகிறார்கள்.

தெலுங்கில் விஜய் கனகாமீதாலா இயக்கத்தில் அல்லரி நரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த படம் 'நாந்தி'. இதனை சதீஷ் வெகேஸ்னா தயாரித்து வந்தார். கரோனாவால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது தங்களது படக்குழுவில் பணிபுரிந்த தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்குமே உதவிச் செய்துள்ளது படக்குழு.

இது தொடர்பாக அல்லரி நரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மனிதநேயத்துக்கான சோதனையான இந்த காலகட்டத்தில், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது நமது கடமை. நானும், தயாரிப்பாளர் சதீஷ் வெகேஸ்னாவும் இணைந்து, நாந்தி படத்தின் குழு சார்பாக, குழுவைச் சேர்ந்த வண்டி ஓட்டுநர்கள், லைட்மேன் மற்றும் அனைத்துத் துறையிலும் உதவியாளர்களுக்கு, கிட்டத்தட்ட 50 நபர்களுக்கு உதவுகிறோம்.

இவர்களெல்லாம் தினக்கூலியை நம்பி இருப்பவர்கள், கோவிட் 19 தொற்று காரணமாக திரைத்துறையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள். இந்த ஊரடங்கு சமயத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 ரூபாயைத் தருகிறோம். இது படப்பிடிப்பு ரத்தான நாட்களில் அவர்கள் இழந்த கூலிக்கு ஈடாக இருக்கும். நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம் என்று இதன் மூலம் உணர்த்துகிறோம்.

நாம் அனைவருக்கும் உதவ முடியாது ஆனால் அனைவரும் யாருக்காவது உதவலாம் என்று ரொனால்ட் ரீகன் சொன்னார். இந்தப் பகிர்வு அங்கீகாரத்துக்காக அல்ல. இது போல உதவுவதை ஒரு இயக்கமாக ஆரம்பிக்க. பாதுகாப்புடன் இருங்கள்"

இவ்வாறு அல்லாரி நரேஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x