Published : 26 Mar 2020 04:29 PM
Last Updated : 26 Mar 2020 04:29 PM

தெலுங்குத் திரையுலகப் பணியாளர்களுக்கு சிரஞ்சீவி 1 கோடி ரூபாய் நிதியுதவி

படப்பிடிப்புகள் இல்லாமல் அவதியுறும், தெலுங்குத் திரையுலகப் பணியாளர்களின் நிவாரணத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 681 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதனிடையே படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தினசரிப் பணியாளர்கள் பலரும் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ரஜினி, கமல், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலர் பெப்சிக்கு நிதியுதவி அளித்துள்ளனர். பலர் அரிசி மூட்டைகளாகவும் உதவிகள் செய்திருக்கிறார்கள்.

இதனிடையே, தெலுங்குத் திரையுலகில் இதேபோன்று பாதிப்புக்குள்ளாகி இருக்கும் தினசரிப் பணியாளர்களுக்கு சிரஞ்சீவி 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்த ஊரடங்கு கரோனா பிரச்சினையைத் தீர்க்க அவசியமானதாக இருந்தாலும் இது இந்த தேசத்தின் தினக்கூலிப் பணியாளர்களையும், மிகக் குறைவான சம்பளம் பெறும் வர்க்கத்தையும் பாதிக்கிறது. இதில் தெலுங்கு சினிமாத் துறையின் பணியாளர்களும் அடக்கம். இதை மனதில் வைத்து திரைத்துறை பணியாளர்களின் நிவாரணத்துக்காக நான் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக அளிக்கிறேன்".

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

— Chiranjeevi Konidela (@KChiruTweets) March 26, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x