Published : 26 Mar 2020 12:51 PM
Last Updated : 26 Mar 2020 12:51 PM

ட்விட்டரில் இணைந்தார் ராம்சரண்: கரோனா பாதிப்புக்கு ரூ.70 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு

ட்விட்டரில் இணைந்துள்ள தெலுங்கு நடிகர் ராம்சரண் முதல் பதிவாக கரோனா பாதிப்புகளுக்கு ரூ.70 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 649 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 13-ஐத் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.2 கோடி வழங்குவதாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (26.03.20) அறிவித்துள்ளார். பவன் கல்யாணின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். #PawanKalyanforPeople என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் பவன் கல்யாணைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம்சரண் கரோனா வைரஸ் பாதிப்புகளுக்காக ரூ.70 லட்சம் நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பவன் கல்யாணின் ட்வீட்டைப் பின்பற்றி, இந்த நெருக்கடியான தருணத்தில் மத்திய அரசு மற்றும் தெலங்கானா, ஆந்திர அரசுகளின் நிவாரண நிதிக்கு 70 லட்ச ரூபாயை வழங்க விரும்புகிறேன்.

கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலைக் குறைப்பதற்காக பிதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர்கள் சந்திரசேகர் ராவ், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்குத் தலைவணங்குகிறேன். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக அனைவரும் தங்களுடைய விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு ஊக்கப்படுத்துகிறேன்'' என்று ராம்சரண் தெரிவித்துள்ளார்.

நேற்று (25.03.20) உகாதி பண்டிகையை முன்னிட்டு, தெலுங்குத் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார்.

சிரஞ்சீவியைத் தொடர்ந்து இன்று அவரது மகன் ராம்சரண் ட்விட்டரில் இணைந்தது மட்டுமின்றி தனது முதல் பதிவாக ரூ.70 லட்சம் நிதி வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். இதுவரை ராம்சரண் இன்ஸ்டாகிராமில் மட்டுமே இயங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x