Published : 26 Mar 2020 10:42 AM
Last Updated : 26 Mar 2020 10:42 AM

கரோனா வைரஸ் பாதிப்பு: ரூ. 2 கோடி வழங்கும் பவன் கல்யாண்

கரோனா வைரஸ் பாதிப்புக்காக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 664 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 12-ஐத் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.2 கோடி வழங்குவதாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பவன் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

''இதுபோன்ற நெருக்கடியான தருணத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் துணை நிற்கும் விதமாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்க இருக்கிறேன். அவரது சீரிய மற்றும் சிறப்பான தலைமை கரோனா அச்சுறுத்துலில் இருந்து நமது நாட்டை வெளியே கொண்டு வரும்.

மேலும், கரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்துப் போராட ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலைமச்சர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க இருக்கிறேன்''.

இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாணின் இந்த அறிவிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x