Published : 25 Mar 2020 08:42 PM
Last Updated : 25 Mar 2020 08:42 PM

மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க என்ன செய்ய வேண்டும்?- நீரவ் ஷா யோசனை

மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா யோசனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

தமிழகத்தில் அத்தியாவசியத் தேவையில்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால், வெளியே காரணமின்றி சுற்றுபவர்களைக் காவல்துறையினர் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைத்து வருகிறார்கள்.

இதனிடையே மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா யோசனை தெரிவித்துள்ளார். இந்த யோசனையை பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

நீரவ் ஷா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மக்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தயவுசெய்து பெட்ரோல் பங்க்குகளை மூடுங்கள். பொருளாதார முடக்கமும் தேவை. சில அத்தியாவசியப் பொருட்களைத் தவிர, பணம் எடுத்துச் செல்வதை அனுமதிக்கக் கூடாது. எல்லா வகையான தவணைகளும், பணம் செலுத்தும் முறைகளும், சம்பளங்களும் முடக்கப்பட வேண்டும்.

மக்களின் கைகளில் பணம் புழங்க வைக்க இது சிறந்த வழியாக இருக்கலாம். மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அத்தியாவசியத் தேவைகள் அல்லாத அலுவலகங்களுக்குச் செல்லும் தண்ணீர் மற்றும் மின்சாரத்தைத் தயவுசெய்து துண்டிக்க வேண்டும்".

இவ்வாறு நீரவ் ஷா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x