Published : 22 Mar 2020 12:35 PM
Last Updated : 22 Mar 2020 12:35 PM

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நினைவகம்: கங்கணா யோசனை

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரில் நினைவகங்கள் அமைக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் யோசனை தெரிவித்துள்ளார்.

2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. 3 டெத் வாரண்ட்டுகளுக்குப் பின் 4-வது டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் கடந்த 20.03.2020 அன்று அதிகாலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டது குறித்து பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ''பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரில் நினைவகங்கள் அமைக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு போன்ற குற்றங்களைச் செய்பவர்களுக்கு சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ளாது என்ற எண்ணம் வரவேண்டும். அவர்களுடைய எண்ணத்தை மாற்ற வேண்டும்.

நம்முடைய நீதித்துறை பழமையானதாகவும், நியாயமற்றதாகவும் இருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய ஒரு கொடூர குற்றத்துக்கு தண்டனை வழங்க நமது நீதித்துறைக்கு 7 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இந்த 7 ஆண்டுகளும் நாம் நிர்பயாவின் தாயையும் அவரது குடும்பத்தினரையும் மறைமுகமாக துன்புறுத்தியிருக்கிறோம்'' என்று கங்கணா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x