Published : 20 Mar 2020 12:29 PM
Last Updated : 20 Mar 2020 12:29 PM

நிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்கு: திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு

நிர்பயா குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பதை திரையுலகப் பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனை பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக தங்களுடைய சமூக வலைதளத்தில் பிரபலங்கள் வெளியிட்ட கருத்துகளின் தொகுப்பு:

ரிஷி கபூர்: நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது. இந்தியாவில் மட்டுமல்ல உலகின் மற்ற நாடுகளுக்கும் இது எடுத்துக்காட்டாக இருக்கட்டும். பாலியல் வன்கொடுமைக்குத் தண்டனை மரணம் மட்டுமே. பெண்மையை நாம் மதிக்க வேண்டும். இந்தத் தண்டனையைத் தாமதித்தவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஜெய்ஹிந்த்!

ரவீனா டன்டன்: நல்ல வேளை அந்த நால்வருக்குத் தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. இந்த பூமியில் 4 அரக்கர்கள் குறைந்துவிட்டனர். 8 நீண்ட வருடங்கள். நீதி கிடைக்கப் பெற்றோர் காத்திருந்தனர். வேகமாக நீதி கிடைப்பதை நாம் உறுதி செய்யும் நேரம் இது. ஒரு வழியாக நிர்பயாவுக்கு அமைதியைத் தேடித் தந்துவிட்டோம்.

அருண் விஜய்: இந்த நாள் நல்ல செய்தியுடன் விடிந்துள்ளது. ஆனால் இதற்காக 7 வருடக் காத்திருப்பு என்பது துரதிர்ஷ்டவசமானது. பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்காக வாதாட வேண்டாம் என வழக்கறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நம் அனைவருக்கும் அம்மா, சகோதரி, மகள் இருக்கின்றனர். இந்த உலகைக் காப்பாற்ற ஆண்களை நன்றாக வளர்க்க வேண்டும்.

வரலட்சுமி: நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டார். ஒரு போராளியாக இறந்தார். இந்த (குற்றத்தைச் செய்த) மிருகங்களைத் தூக்கில் போட நமது நீதித்துறைக்கு 7 வருடம் ஆகியிருக்கிறது. ஆனால் நிர்பயாவின் வாழ்வை நாசமாக்க குற்றவாளிகள் 7 நிமிடங்கள் கூட யோசிக்கவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டை என்பது இப்போதாவது தரப்பட வேண்டும்.

கார்த்தி: 8 வருடங்கள் கழித்து ஒரு வழியாக நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது. பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என யோசிக்கிறேன். ஏற்கெனவே ஒரு வருடம் முடிந்துவிட்டது. அதிலிருந்து நாம் கற்ற பாடங்களை மறக்க மாட்டோம் என நம்புகிறேன். எப்போதும் பாதுகாப்பாக இருங்கள்

டாப்ஸி: ஒரு வழியாக நடந்துவிட்டது. பல வருடங்கள் கழித்து இன்றிரவாவது அந்த பெற்றோரால் சற்று ஒழுங்காக உறங்க முடியும் என்று நம்புகிறேன். இது அவர்களுக்கு நீண்ட நெடும் போராட்டமாக இருந்திருக்கிறது.

தமன்னா: நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டார்கள் என்ற அற்புதமான செய்தியுடன் இந்த நாளைத் தொடங்குகிறேன். நீதி வழங்கப்பட்டுவிட்டது.

பார்த்திபன்: உலக மகிழ்ச்சி தினமின்று! 30 நிமிடங்கள் கழித்து உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு. ஆனால் 7 நீண்ட வருடங்கள் கழித்தே மட்டமான சில உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன!

பிரசன்னா: ஒரு வழியாக நிர்பயாவின் ஆன்மா சாந்தியடையும். இதிலிருந்து (மற்ற குற்றவாளிகள்) பாடம் கற்கட்டும். நமது பெண்கள் அமைதியுடன், மரியாதையுடன், கண்ணியத்துடன் வாழட்டும்.

ஜே.சதீஷ் குமார்: நிர்பயா. கடைசியாக நீதி கிடைத்துவிட்டது. இது மிகத்தாமதம். ஆனாலும் நல்ல செய்தி.

கிருஷ்ணா: ஒரு அப்பாவிப் பெண் ஒரு நாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுச் சாகடிக்கப்படுகிறாள். 7 வருடங்கள் கழித்து, குற்றவாளிகள் தூக்கிலிடப்படுகிறார்கள். ம்ம்ம்ம். அந்தப் பாவப்பட்ட பெண்ணை விட 7 ஆண்டுகள் கூடுதலாக வாழும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. நீதி படுதாமதமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நன்றி. இந்த நீதி அமைப்பால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளேன். இப்போதாவது நடந்ததே.

ராதிகா சரத்குமார்: நீதி கிடைத்துவிட்டது. நமது மகன்களைப் பெண்களை மதிக்குமாறு வளர்க்க இது பலருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x