Published : 19 Mar 2020 08:51 PM
Last Updated : 19 Mar 2020 08:51 PM

மகான் புகுந்தார்; அத்துடன் க்ளோஸ்: விஷாலை மறைமுகமாகச் சாடிய ராதாரவி

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.சிவா அணியின் அறிமுகக் கூட்டத்தில், விஷாலை மறைமுகமாகச் சாடிப் பேசினார் ராதாரவி.

ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடும் போட்டிக்கு இடையே முதல் நபராக டி.சிவா தனது தலைமையிலான அணியை அறிவித்துள்ளார். இதில் தலைவராக டி.சிவா, பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக தேனப்பன், ஜே.சதீஷ் குமார் மற்றும் துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்ஜெயன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இந்த அணியின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்றது. கரோனா முன்னெச்சரிக்கையால் சிலரை மட்டுமே அழைத்து இந்தக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

செயற்குழு உறுப்பினராகப் போட்டியிடவுள்ள ராதாரவி இதில் பேசியதாவது:

“4 படங்கள் மட்டுமே தயாரித்துள்ளேன். நான் பெரிய தயாரிப்பாளர் கிடையாது. நடிகர், டப்பிங் யூனியன் தலைவர், பெப்சி என இருந்துகொண்டு தயாரிப்பாளர்களுடன் சண்டையிடும் ஆள். தொழிலாளர்களுக்காகச் சண்டையிடும் ஆள். அனைவரும் ஒரே அணியாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். மூன்று அணி என்று நின்று, அதில் ஒரு மகான் புகுந்தார். அத்துடன் க்ளோஸ். அதனால்தான் தயாரிப்பாளர் சங்கம் நாசமாகப் போய்விட்டது. இப்போது புல் முளைக்கும் இடமாகிவிட்டது. ஏற்கெனவே நடிகர் சங்கத்தில் முளைத்துவிட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் முளைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தமிழர் ஒருவர்தான் தலைவராக வர வேண்டும். அதற்கு சிவா பொருத்தமான நபர். இந்த அணி தேறுமா, தேறாதா என்று சிந்தித்து வாக்களியுங்கள். எனக்கு ஒரே வருத்தம். நடிகர் சங்கத்தில் எப்போது தேர்தல் என்று தெரியாது. அந்தப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. என் ஓட்டு வந்துவிட்டால் நான் அமைதியாகி விடப்போகிறேன். ஆனால், நடிகர் சங்கத்தின் தேர்தலில் நிற்கமாட்டேன். எப்போது பணம் கொடுத்து ஜெயிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டதோ, அந்த சங்கத்தில் நிற்கக் கூடாது. என் நடிகர்களை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டார்கள்.

இங்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் அதே பிரச்சினை இருந்தது. ஆனால், இம்முறை மூன்று அணியாக இல்லாமல் இரண்டு அணியாக இருந்தால் சிறப்பாக இருக்கும். இந்த அணிக்கு வாக்களித்தால் உங்களுக்கு லாபம். வாக்களிக்கவில்லை என்றால் இவர்களுக்கு லாபம். இவர்கள் பேசாமல் படம் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையாக உழைப்பதற்காக வந்திருக்கிறார்கள்”.

இவ்வாறு ராதாரவி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x