கரோனா அச்சுறுத்தல்: வீட்டில் இருக்கும் நேரத்தை ஓவியம் வரைவதில் செலவு செய்யும் சல்மான் கான்; வைரலாகும் வீடியோ

கரோனா அச்சுறுத்தல்: வீட்டில் இருக்கும் நேரத்தை ஓவியம் வரைவதில் செலவு செய்யும் சல்மான் கான்; வைரலாகும் வீடியோ
Updated on
1 min read

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2.03 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் இறந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

கோவிட் - 19 வைரஸை ‘உலகளாவிய நோய்த் தொற்று' என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் இருக்கும் நேரத்தை ஓவியம் தீட்டுவதில் செலவு செய்து வருகிறார். தான் ஓவியம் தீட்டும் வீடியோ ஒன்றை இன்று (19.03.20) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சல்மான் கான். அந்த வீடியோவின் தொடக்கத்தில் ‘நமது ஆடை அணியும் முறைதான் கலாச்சாரம் செய்ததிலேயே மிகச்சிறந்த விஷயம்’ என்று கூறும் சல்மான் ஒரு ஆணின் முகமும் ஒரு பெண்ணின் முகமும் கொண்ட ஒரு ஓவியத்தைத் தீட்டத் தொடங்குகிறார்.

இந்த வீடியோ இதுவரை 20 லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in