Published : 18 Mar 2020 07:42 PM
Last Updated : 18 Mar 2020 07:42 PM

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த 'பிரபாஸ் 20' படக்குழு

தங்களுடைய படம் தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு 'பிரபாஸ் 20' படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் புதிய படம் தொடங்கப்பட்டது. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த இந்தப் படம், 'சாஹோ' வெளியீட்டுக்குப் பிறகு சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது புதிதாக அரங்குகள் அமைத்து முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கினார்கள். சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியா நாட்டுக்குச் சென்று, முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தார்கள். கரோனா அச்சத்தால் பல்வேறு படக்குழுவினர் படப்பிடிப்புகளை ரத்து செய்து வந்த நிலையில், தைரியமாக 'பிரபாஸ் 20' படக்குழு படப்பிடிப்பைத் தொடர்ந்தது.

இது தொடர்பாக இயக்குநர் ராதா கிருஷ்ணாவும் ட்வீட் செய்திருந்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே படக்குழுவினர் ஹைதராபாத் திரும்பிவிட்டனர். இதனால், படப்பிடிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுத் திரும்பிவிட்டது என்று தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலுக்குப் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

"ஜார்ஜியாவில் திட்டமிட்ட காட்சிகளைப் படமாக்கிவிட்டே திரும்பியுள்ளோம். கரோனா அச்சம் தொடர்பாகப் படப்பிடிப்பை வேகமாக நடத்தி, 2 நாட்களுக்கு முன்பே முடித்துவிட்டோம்" என்று இயக்குநர் ராதா கிருஷ்ணா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் தங்களுடைய ட்விட்டர் பதிவில் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்து திரும்பிவிட்டதாகவும், விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, 'மஹாநடி' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் பிரபாஸ். இதனை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

— UV Creations (@UV_Creations) March 17, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x