Published : 18 Mar 2020 05:02 PM
Last Updated : 18 Mar 2020 05:02 PM

கரோனா பாதிப்பு; பிக் பாஸ் மலையாளம் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்திவைப்பு

கோவிட்-19 பாதிப்பால் மலையாளத்தில் ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்று பல்வேறு தரப்பைப் பாதித்துள்ளது. இதில் ஊடகங்களும் விதிவிலக்கல்ல. சர்வதேச அளவில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக இந்தியாவில் முக்கிய மாநில மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

கேரளாவில் மோகன்லால் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார். தற்போது இரண்டாவது சீஸன் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வரும் வேளையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் எண்டெமால் ஷைன் இந்தியா தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில், கோவிட்-19 தொற்றால், அடுத்த அறிவிப்பு வரும் வரை தாமாகவே முன் வந்து அனைத்துத் தயாரிப்பு மற்றும் நிர்வாக வேலைகளையும் நிறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது. இதைப் பற்றி ஏசியா நெட் நியூஸ் தொலைக்காட்சியிலும் செய்தி வந்து, குறிப்பிட்ட நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்படுவது குறித்து அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் வண்ணம் இந்நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் எண்டெமால் தரப்பு கூறியுள்ளது.

இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்துக்குப் பிறகு கேரளாவில்தான் அதிக அளவு கோவிட்-19 பாதித்த நோயாளிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு வெளிநாட்டவர் உட்பட 24 நோயாளிகள் தற்போது சிகிச்சையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x