Published : 11 Mar 2020 12:31 PM
Last Updated : 11 Mar 2020 12:31 PM

இரையாகிவிடாதீர்கள் தயாரிப்பாளர்களே: மிஷ்கினை மறைமுகமாகச் சாடி விஷால் அறிக்கை

இயக்குநர் மிஷ்கினை கடுமையாகச் சாடி விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'துப்பறிவாளன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (மார்ச் 11) மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்துள்ளது. அதற்குப் பிறகு விஷால் - மிஷ்கின் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், இயக்குநர் மிஷ்கின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.

தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை விஷாலே ஏற்றுக் கொண்டுள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படமாக 'துப்பறிவாளன் 2' அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விஷாலுக்கு மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள் கொண்ட கடிதமும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இயக்குநராக அடியெடுத்து வைத்திருப்பது தொடர்பாக விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராகச் சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை படத்தின் முதல் பார்வையை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

கனடா மற்றும் இங்கிலாந்தில் கதை எழுத விரும்பிய ஒரு இயக்குநர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்ச ரூபாய் செலவழித்து, அதற்கும் மேலாகப் பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தைத் தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் 13 கோடி ரூபாய் பணத்தைச் செலவழித்த பின்னர், படத்தை விட்டு ஒரு இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா? இல்லை .

படத்தின் தயாரிப்பின்போது, ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர் சுட்டிக் காட்டினால் அது தவறா? இங்கிலாந்தில் 3 முதல் 4 மணிநேரப் படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காக சுட்டிக்காட்டிய விஷயங்களா? இல்லை.

ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்குப் பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா? இல்லை. நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன், ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்த குழந்தையை அநாதை இல்லத்தில் கைவிடுவது போல மோசமாக இருக்கிறது.

இப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு, இந்தப் படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் விஷால் பிலிம் ஃபேக்டரி அலுவலகத்திற்கு வருவது ஒரு இயக்குநருக்குச் சரியானதா?

நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுகத் தயாரிப்பாளரோ, அறிமுகத் தயாரிப்பாளரோ, எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி அவர்கள் ஷூட்டிங்கின் போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையைச் சந்திக்கக்கூடாது. நல்ல வேலையாக, திரைப்பட தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இந்தப் படத்தைக் கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால், முன்னோக்கிச் சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும் உறுதி செய்கிறேன்.

இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரைக் கெடுப்பது அல்ல. ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம். ஆனால், அனைத்து தயாரிப்பாளர்களும் (புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள்) விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்) போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு 'துப்பறிவாளன்-2' படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே என்று நினைக்கிறேன்.

இயக்குநராக அறிமுகமாக உங்கள் ஆசிர்வாதங்களையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராகச் சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன்”.

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x