Last Updated : 08 Mar, 2020 11:29 AM

 

Published : 08 Mar 2020 11:29 AM
Last Updated : 08 Mar 2020 11:29 AM

சொந்த நலனில் பெண்கள் அன்பு காட்டுவது அவசியம்: ஐஸ்வர்யா தனுஷ் நேர்காணல்

இமயமலை யாத்திரை, தியானம், யோகா என ஐஸ்வர்யா தனுஷும் அப்பா ரஜினி போலவே ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான கதையாக்கப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சென்னையில் பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு யோகா மையத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் அவருடன், மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு நேர்காணல்..

திரைப்பட இயக்குநரான நீங்கள் தியானம், யோகா என கவனம் செலுத்தி வருகிறீர்களே?

மும்பை போன்ற வட இந்திய பெரு நகரங்களில் பலரும் தங்கள் தொழில், வேலைக்கு நிகராக உடல்நலத்திலும் அக்கறை காட்டுவதை காண முடியும். தமிழகத்திலும் உடற்பயிற்சி, ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோர் அதிகம் உள்ளனர். ஆனால், பலரும் இதை வெளிப்படையாக செய்வதில் ஒருவித தயக்கம் காட்டுகின்றனர். தயங்கித் தயங்கி வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்வார்கள். அதுபோன்ற தயக்க உணர்வைப் போக்கி, பெண்கள் மத்தியில் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினேன். தென்னிந்தியாவில், குறிப்பாக சென்னையில் முழுக்க பெண்களுக்காக ஒரு யோகா மையத்தை ஒருங்கிணைத்து நடத்தலாம் என்ற முயற்சியில் தொடங்கியதுதான் ‘திவா யோகா’ மையம். நண்பர் சர்வேஷ் பெரும் உதவியாக இருக்கிறார். தியானம் சார்ந்த எனது தொடக்கப் புள்ளி இது. படிப்படியாக இது வளர்ச்சி அடையும்.

திடீரென யோகா மீது ஆர்வம் வந்தது எப்படி?

இது திடீரென வந்த ஆர்வம் அல்ல. தியானம், யோகா ஆகியவற்றில் அப்பா, அம்மா கவனம் செலுத்துவதை சிறு வயதில் இருந்தே பார்த்து, கேட்டு வளர்ந்தவள் நான். அதை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன்.

‘திவா யோகா’ குழுவினருடன் ஐஸ்வர்யா தனுஷ்.

கிராமப்புற பெண்களிடம் தியானப் பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு இருக்கிறதா?

யோகா, தியான அனுபவங்கள், அது தரும் நன்மைகள் குறித்து குக்கிராமங்கள் வரை விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. நகரமோ, கிராமமோ.. வீட்டைவிட்டு வெளியே வந்து பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைப்பவர்கள் மையத்துக்கு செல்கிறார்கள். மற்றவர்கள் வீட்டிலேயே பயிற்சி செய்கின்றனர். குடும்பம், குழந்தைகள் மீது அளவுகடந்த அன்பு, அக்கறை காட்டுபவர்கள் பெண்கள். அதே அன்பு, அக்கறையை உடல், மனரீதியாக பெண்கள் தங்கள் சொந்த நலனிலும் செலுத்துவது அவசியம்.

சமீபகாலமாக அப்பா ரஜினியின் ஆன்மிக பயணத்திலும் உங்களை பார்க்க முடிகிறதே?

கடந்தமுறை அப்பாவுடன் சேர்ந்து, முதல்முறையாக இமயமலைக்கு சென்றுவந்தேன். பத்ரிநாத், கேதார்நாத் போன்ற புனிதத் தலங்களில் நம் கால்தடம் படுவதே பெரிய வரம். அந்த வகையில் நான் பாக்கியசாலி. அதுவும் அப்பாவுடன் அங்கே சென்றது, நடைபயிற்சி, தெருவோரக் கடைகளில் தேநீர் அருந்தியது வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். அந்த இடங்களுக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது எல்லோரும் சென்றுவர வேண்டும்.

சினிமா இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் என்ன ஆனார்?

எனது அடுத்த படத்துக்காக கதை ஆக்கப் பணிகள் நடந்து வருகின்றன. தனி நபராக நான் மட்டுமே இயங்காமல் ஒரு குழுவாக பணியாற்றி வருகிறோம். தற்போது எழுத்துப் பணிகள் நடக்கின்றன. அது முடிந்த பிறகு, அந்த கதைக்கு யார் யார் பொருத்தமாக இருப்பார்களோ, அவர்களையும் இணைத்துக்கொண்டு பணியாற்றுவோம். விரைவில் அதுபற்றிய அறிவிப்பு இருக்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x