Published : 06 Mar 2020 08:17 AM
Last Updated : 06 Mar 2020 08:17 AM

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் வேண்டாம்; அனைவரும் கூடிப் பேசி தலைவரை தேர்வு செய்வோம்- பாரதிராஜா உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கருத்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் வேண்டாம். அனைவரும் கூடிப் பேசி ஒரு தலைவரை தேர்ந்தெடுப்போம் என்று பாரதிராஜா உள்ளிட்ட முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷாலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன்முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து சங்கத்துக்கு தேர்தல் நடத்தவிருந்த நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைஅடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தனி அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்தது. இதற்குஎதிர்ப்பு தெரிவித்து விஷால் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 30-ம் தேதிக்குள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், ராஜன், முரளி உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:

நாங்கள் இந்தப் பதவியில் இருந்தபோது, சங்கத்தின் சொத்துகளை அழிக்காமல் பார்த்துக்கொண்டோம். அதேபோல, ஒரு அரசாங்கத்தை எதிர்த்து இங்கே எந்த பயனையும் அடைந்துவிட முடியாது. எதையும் சாதிக்கவும் முடியாது. ஆகவேதான் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களில் முக்கியமான சிலர் கூடிப் பேசி ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம்.

தேர்தல் இல்லாமல் நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு தலைமையை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் ஆதரவு அளிக்கவேண்டும். தலைமை பதவிக்கு வருபவருக்கு அடையாளம் இருக்கக்கூடாது. நல்லது செய்யவேண்டும் என்கிற ஒரே எண்ணம்மட்டும்தான் இருக்க வேண்டும். பெரியவர்கள் நாங்கள் சொல்கிறோம். இதை கேட்டு தேர்தல் இல்லாமல் ஒரு நல்ல மனிதரை தேர்வு செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

பொது வாழ்வில் குற்றம் செய்யாதவர்கள்தான் தேர்தலில் நிற்க வேண்டும். கடந்த காலங்களில் பதவியில் இருந்த சிலருக்கு இது புரியும்.அவர்களாக ஒதுங்கிக்கொண்டால் நல்லது. இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x