Published : 05 Mar 2020 03:17 PM
Last Updated : 05 Mar 2020 03:17 PM

இயக்குநர்களின் திரை வாழ்க்கையை முடக்கும் 8 விஷயங்கள்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பட்டியல்

புதிய இயக்குநர்களை முடக்கிவிடுவது எது என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பட்டியலிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பாளராக வலம் வருபவர் எஸ்.ஆர்.பிரபு. 'மாயா', 'அருவி', 'கைதி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது 'கைதி' இந்தி ரீமேக், விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு படம், 'சுல்தான்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வருகிறார்.

தமிழ்த் திரையுலகின் தற்போதைய நிலை குறித்தும், இயக்குநர்களின் கதையம்சம் உள்ளிட்டவைக் குறித்தும் தனது ஃபேஸ்புக் பதிவில் பெரிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார் எஸ்.ஆர்.பிரபு.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''திரைத்துறைக்கு வந்து 11 வருடங்கள் கடந்துவிட்டன. தினமும் இரண்டுக்கும் மேற்பட்ட நண்பர்கள், இயக்குநர் ஆர்வத்துடன் அணுகும்பொழுது நாம் இருக்கும் துறை மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் குறையாமல் இருப்பது நமக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தாலும் இனம் புரியாத கவலை ஒரு ஓரமாக எட்டிப் பார்க்கிறது.

பல்வேறுபட்ட துறைகள் இங்கு இருந்தாலும், திரைத்துறை என்று வரும்பொழுது அதன் மேலுள்ள கனவும் எதிர்பார்ப்பும் அளப்பரியது. இந்த கனவுகளுக்குப் பின் ஒரு தனி நபரல்லாது அவரது உறவுகள் தொடங்கி நண்பர், ஊர், வட்டம் எனப் பலரது ஆசை, நிராசைகள் அடங்கியுள்ளதை எண்ணும்பொழுது ஒரு கதையை நிராகரிப்பது ஒருவரின் வாழ்க்கைக் கனவைக் குறைந்தது ஆறு மாதகாலம் தள்ளிப்போடும் செயலாகவே தோன்றும்.

ஆனால், இவ்வளவு போட்டியும் பொறாமையும் உள்ள ஒரு தொழிலில் உச்சபட்ச திறன் மட்டுமே குறைந்தபட்ச அதிர்ஷ்டத்தின் உதவியுடன் வெற்றியைத் தர முடியும். அந்த வெற்றிதான் பலரது வாழ்க்கையை ஒருசேர முன்னேற்றும் தன்மை உடையது என்பதால் அந்தப் பொறுப்புணர்வு ஒவ்வொரு முறையும் பாரபட்சம் பாராமல் எங்களை முடிவெடுக்க வைக்கிறது.

இந்த நிராகரிப்புகளின்போது நாங்கள் எதிர்கொள்ளும் நண்பர்களின் எதிர்வினைகள் பலவிதமாக இருக்கும். இதனைச் சமாளிப்பது இன்னும் கடினமான விஷயமாகவே உள்ளது. பலர் உங்களுக்கு என்ன மாதிரியான கதை வேண்டும் என்று கேட்பதுண்டு. என்றும் அதற்கான ஒரே பதில், நன்றாக இருக்கும் எக்கதையும் சரி என்பதேயாகும்.

கடந்த வருடத்தில் நாங்கள் படித்த சுமார் 300 கதைகளில் 3 கதைகள் மட்டுமே எங்களுக்குப் பிடித்த கதையாக இருந்தது. சிலசமயம் நமக்குப் பிடிக்காத கதை வேறு ஒருவருக்குப் பிடித்துவிடும், அப்படி சில படங்கள் வந்து வெற்றி பெறுவதும் உண்டு. ஆக நாம் மட்டுமே ஒரு நல்ல கதையை அங்கீகரிக்கும் திறன் உள்ளவர் என்ற வாதமும் முற்றிலும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் தயாராகி வெளியாகும் படங்களின் மொத்த வெற்றி சதவீதத்தைப் பார்த்தால் இன்னும் 5% ஐ சுற்றித்தான் இருக்கிறது. இந்த வெற்றி சதவீதம் என்னை என்றும் உறுத்திக்கொண்டே உள்ளது.

இது ஏன் உயரக்கூடாது என்ற கேள்வி வரும்பொழுது எல்லாம் எனக்குத் தோன்றிய சில விஷயங்களை இங்கே எழுத முயல்கிறேன். இது இங்கே இடைவிடாது முயற்சி செய்துவரும் ஏதேனும் ஒரு திரை ஆர்வலருக்கு உதவுகிறதோ இல்லையோ, என்னை அன்றாடம் இம்சை செய்துவரும் எண்ண பாரத்தை இறக்கி வைத்த திருப்தியையாவது தரும் என்று நம்புகிறேன்!

உதவி இயக்குநர்களுக்கு ( இளைய கதாசிரியர்கள் ) டிஜிட்டல் யுகம் ஒருவகையில் கடந்த கால கஷ்டங்களைக் குறைத்திருந்தாலும் இன்னும் முதல் பட வெற்றிக்குப் பின்தான் தாடி எடுப்பது என்பது முதல் வாகனம், வீடு, திருமணம் குழந்தை எனப் பல விஷயங்களைத் தேக்கி வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் உள்ளதைக் காண்கிறேன். இதைப் பார்க்கையில் கிபி, கிமு போன்று முதல் படத்திற்கு முன், பின் என்ற மந்திரத்தை உடைப்பதற்கான தருணம் வந்துவிட்டது என்று உரக்கச் சொல்லத் தோன்றுகிறது.

ஏனென்றால் வருடத்திற்கு 2 அல்லது 3 பேரைத் தவிர எவருக்கும் முதல் படத்திற்குப் பின் வெற்றியோ/தோல்வியோ அது எவ்வித முன்னேற்றமும் தருவதில்லை என்பதே யதார்த்தம் ஆகும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அது முன்பைவிட மோசமான நிலையைத்தான் பல இயக்குநர்களுக்குத் தருகிறது. ஒருவர் ஒரு படம் இயக்கி, அது வெளிவந்துவிட்டாலே அவர் முந்தைய வட்டத்தில் இருந்து அடுத்த வட்டத்திற்குப் போர் விமானத்திலிருந்து எஜக்ட் செய்யப்பட்ட விமானி போல் வந்து விழுகிறார். இதைச் சமாளிக்கவே கவுன்சிலிங் போன்ற உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது என எண்ணுகிறேன்.

முதல் படம் வெளியாகும் வரை ஒருவருக்கு அவரைச் சுற்றியுள்ளவர்கள் ஏதேனும் ஒருவகையில் அனுசரனையுடன் இருப்பார்கள். அதற்குப் பின் அவர் மேல் இருந்த அனுதாபமும், அனுசரனையும் பெரும்பாலும் மாறி ஏதேனும் ஒரு எதிர்பார்ப்பை தனக்காகவோ இன்னொருவருக்காகவோ திணிப்பார்கள். குறைந்தபட்சம் தன்னிடம் முன்பு போலவே நடந்துகொள்கிறாரா என்று இடைவிடாது பரீட்சித்துக் கொண்டாவது இருப்பார்கள். இதனால் அவர்கள் சந்தர்ப்பவாதிகளோ, தவறான எண்ணம் கொண்டவர்களோ, பாசமற்றவர்களோ அல்ல.

அவர்களும் அந்த இயக்குநர் போலவே முதல் படத்திற்குப்பிறகு வாழ்க்கை மொத்தமும் மாறிவிடும் என்ற பிம்பத்துடன் அவருடன் பயணித்திருப்பார்கள். இது வெற்றி பெற்ற அல்லது தோல்வியுற்ற இருதரப்பினருக்கும் பொருந்தும். இந்தப் புது அழுத்தம் பெரும்பாலும் அந்த இயக்குநரைச் சிதைத்து விடுகிறது. ஆக ஒரு இயக்குநர் தனது முதல் படத்திற்கு வாய்ப்பு தேடுவது மட்டுமல்லாமல் அதன் வெற்றி அல்லது தோல்விக்குத் தன்னை முன்னரே தயார்படுத்திக்கொள்ளும் போதுதான் அவரது படைப்புகளையும், வாழ்க்கையையும் வெகுகாலம் நிலையாக வைத்துக்கொள்ள முடியும்.

இங்கு தோல்வியுற்றவர்களுக்கு எந்த அளவு பக்குவம் தேவைப்படுகிறதோ அதைவிட அதிக அளவு பக்குவம் வெற்றி பெற்றவர்களுக்குத் தேவைப்படுகிறது. அது தவறும்பொழுது தமது ஆரம்பக் காலத்தில் கவனம் ஈர்த்த பலர் அதற்குப்பின் இங்கு அடையாளம் இழந்து விடுகிறார்கள்.

ஹாலிவுட்டில் மட்டும் 75 வயதில் இன்னும் எப்படி சிறப்பான படங்களை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பலரும் அடிக்கடி என்னிடம் குறைபட்டுக் கேட்பதுண்டு. அதற்கு சில காரணங்கள் உள்ளன. அதைப் பற்றிப் பேசினாலே மனக்கசப்போ, பகையோ ஏற்படும் என்பதால் பலரும் பேசத் தயங்குகிறார்கள். ஆனால் நாம் இருக்கும் துறை நன்றாக இருக்க வேண்டும் என்ற என் ஆர்வம், கோளாறு ஆனாலும் பரவாயில்லை என்றே இங்கே பதிவிடுகிறேன். அதுமட்டுமல்ல சமீபத்தில் நிராகரிப்புக்கு ஆளாகி மனச்சிதைவு ஏற்பட்டு ரோட்டோரத்தில் ஏதோ எழுதிக்கொண்டே இருக்கும் ஒரு முன்னாள் உதவி இயக்குநரின் நிலையும் என்னை இதை எழுதத் தூண்டியது.

ஒரு பட அனுபவம் பெற்றவர்கள் தங்கள் ஆசை நிராசை என அனைத்தையும் கண்மூடித்தனமாக அடக்கிக் கொண்டே ஒவ்வொரு விஷயத்தையும் படம் முடியட்டும் எனக் கடந்துவிடுகிறார்கள். அதன் பின்னர் இவ்வளவு பொறுத்துவிட்டேன் இனியும் பொறுக்க வேண்டுமா எனப் பல குணநலன்களை மாற்றியமைக்கிறார்களோ என்றே எனக்குத் தோன்றுகிறது. அவ்வாறான உளவியல் மாற்றமே இங்கு பல இயக்குநர்களின் திரை வாழ்க்கையை முடக்கிவிடுகிறது என நான் நம்புகிறேன். அப்படியானவற்றில் சிலவற்றையும் இங்கே பார்க்கலாம்.

ஈகோ:

படைப்பாளிக்கே உண்டான அடிப்படை குணாதிசயமான ஈகோ, அளவாக இருப்பின் படைப்பையும், படைப்பாளியையும் காக்கும் கவசமாக இருக்கிறது. அளவை மீறும்போது இயக்குநர்களின் படைப்பு, நட்பு, உறவு, பொருளாதாரம் எனப் பலவற்றை இழக்கக் காரணமாக உள்ளது. இதை அடிக்கடி சுய அளவீட்டிற்கு ஏற்படுத்திக்கொள்வதின் மூலம் பல இழப்புகளைத் தவிர்க்க இயலும்.

சமூகம்:

வெற்றி பெறுபவர் அனைவரையும் நல்லவர் எனவும், திறமைசாலி எனவும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டாடும் நம் சமூகத்திடமும் பிரச்சினை உள்ளது. இவ்வாறான கொண்டாட்டங்கள் வெற்றி பற்றிய தவறான புரிதலைப் படைப்பாளிகளுக்குக் கொடுக்கிறது. தான் ஒவ்வொரு முறை கொண்டாடப்படும் பொழுதும் இது நிரந்தரமானதல்ல என்பதை நினைவுபடுத்திக்கொள்ள தன்னால் இயலாவிட்டாலும் தன்னுடன் உள்ள நபர் உணர்த்தும்படியான சூழ்நிலையையாவது பாதுகாத்தல் நல்லது.

பயம்:

பெற்ற வெற்றியைத் தக்கவைக்க வேண்டும் என்ற பயம் பெரிய இடைவெளியை இயக்குநருக்கும் அவரது குழுவிற்கும் இடையே ஏற்படுத்துகிறது. இது அந்தப் படைப்பாளியை அவரது பலம், பலவீனங்களை அறிந்து அவரை அதுவரை தாங்கி நிற்கும் நபர்களை இழக்கச் செய்கிறது. இதே பயம் படம் உருவாகும் தருணத்தில் சில இயக்குநர்களை Trauma நிலைக்குத் தள்ளி ஒருவித உயிர் பயத்தில் அவதிப்படும் சூழ்நிலையையும் கண்டுள்ளேன். எனவே இந்த நிலைக்கு வருவதற்குள் தங்களைப் பக்குவப்படுத்தி நிதானமாகச் செயல்படும் மனநிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் முதல் படத்திற்காக 10 வருடம் வரை காத்திருக்கவும் தயாராயிருப்பவர்கள், காத்திருப்பிற்குப் பயந்து அடுத்த பட வாய்ப்பை அவசரப்பட்டு உறுதிசெய்துவிட்டுக் கஷ்டப்படுகிறார்கள். இல்லையேல் படப்பிடிப்புக்குச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு மற்ற விஷயங்களில் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.

போதை:

ஒருவர் வெற்றி பெறும் வரை தனது வளர்ச்சிக்குத் தடையாகக் கருதி பலதரப்பட்ட போதை தரும் விஷயங்களை ஒதுக்கி வைத்திருப்பார். வெற்றிக்குப் பின் அதுவரை இருந்த வைராக்கியம் வலுவிழந்து விடுகிறது. அதுமட்டுமல்ல அதுவரை எட்டாக்கனியாக இருந்த விஷயங்கள் அனாயாசமாக அருகில் வந்து உரசி விரசமாக்கிச் செல்லும். சாம்ராஜ்ஜியங்களையே அழித்த சில பலவீனங்களுக்கு ஓரிரு பட வெற்றி கண்டவர்கள் எம்மாத்திரமே. இங்கே நான் யாரையும் சன்னியாசியாக வாழப் பிரசாரம் செய்யவில்லை. அந்த சூழ்நிலைக்குத் தள்ளப்படாமல் பார்த்துக்கொள்ளவே சொல்கிறேன்.

விரோதம்:

ஒரு படம் உருவாகும்போது கருத்து வேறுபாடுகள் இயல்பாகவே உருவாகும். ஆனால், படம் வெளியான பின் அது விரோதமாக மாறுவதும், அதனடிப்படையில் தமது அணுகுமுறையில் தவறான மாற்றம் கொண்டுவருவதும் அடுத்து பல நல்ல படைப்புகள் வீணாகக் காரணமாகிறது. தவறாக ஒரு முடிவு எடுத்துவிட்டால் பின்னர் அதற்கு நேரெதிரான முடிவு எடுப்பது சரியாகிவிடாது. நடந்த தவறை சிலமுறை யோசித்து அடுத்து கண்மூடித்தனமாக முடிவெடுக்காமல் சரியான முறையில் அதை அணுக வேண்டும் என்பதே என் யோசனையாகும்.

மாற்றம்:

மாற்றம் ஒன்றே மாறாதது என மாறி மாறி பேசிக்கொண்டாலும் கால மாற்றத்திற்கு தகுந்தாற்போல் தங்களைப் புதுப்பித்துக்கொள்ளப் பலர் தவறி விடுகிறார்கள். தன்னை அல்லது தனது படைப்பைப் பற்றிய கருத்துகளையோ அல்லது மற்ற படைப்புகளைப் பற்றியோ தான் பேசுவதைக் குறைத்து அடுத்தவர் பேசுவதைக் கவனித்து மட்டுமே வந்தால் நம்மால் நம்மைச் சுற்றி நடக்கும் மாற்றங்களை உணர முடியும் என நம்புகிறேன். இது தவறும்போது ஒருவர் அடுத்தடுத்து சமகால படங்கள் எடுக்க, பெரும் தடங்கலாகி விடுகிறது.

கதாசிரியர்:

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என நான்கு முக்கிய இலாகாக்களில் ஒருவரே சிறப்பாகச் செயல்பட்டு அவரே தொடர்ச்சியாக எல்லா படங்களும் எடுப்பது இயலாத காரியம். முன்பு போன்று ஸ்டுடியோக்கள் இங்கே இல்லாத சூழ்நிலையில் 80-க்குப் பிறகு இயக்குநர், நடிகர்களை நம்பியே திரைத்துறை இயங்கி வருகிறது. கதாசிரியர்களை ஊக்குவிக்காமல், சரியான ஊதியம் வாங்கித் தராமல் தானே எல்லாம் செய்ய ஆரம்பிக்க இங்கே கதைப்பஞ்சம் உருவாகி விட்டது.

தென்னிந்தியத் திரைத்துறைக்கே தலைமையிடமாக விளங்கிய தமிழ்நாட்டில் கதாசிரியர் பஞ்சம் என்றால் அது இன்றைய காலகட்டத்தில் படம் எடுக்கும் அனைவரையுமே சாரும். இன்றைய சூழ்நிலையில் ஒரு இயக்குநர் நினைத்தால் மட்டுமே ஒரு கதாசிரியர் உருவாக முடியும். இனியாவது அது நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

பொறுமை:

தன்னை விட அனுபவம், அறிவு, வெற்றி, வயது என ஏதேனும் குறைந்தவரிடம் மற்றவர்கள் எளிதில் பொறுமை இழப்பதும், சகிப்புத்தன்மை இல்லாமல் எரிந்து விழுவதும், அவர்களுக்கெல்லாம் என்ன தெரியும் என்ற அலட்சியமும், அவர்களிடம் இருந்தும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்றில்லாமல் தங்கள் சுயபெருமை பேசியும் ஓடவிடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவர் தனது படத்தைப் பார்க்கவில்லை என்றாலோ, அல்லது பிடிக்கவில்லை என்றாலோ அவரை எதிரியாகப் பாவிக்கும் மனப்பான்மை இன்னும் உள்ளதைக் காண்கிறேன். இவற்றில் எல்லாம் மாற்றம் உருவாகும் பொழுது எந்த வயதானாலும் அந்த காலகட்டத்திற்குத் தகுந்த படங்கள் எடுக்க இயலும்

ஆக கதை எழுத, படம் இயக்க ஆசைப்படுபவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், திரைத்துறையைத் தாம் சென்றடையப் போகும் இறுதியான இடமாகப் பார்க்காமல், தான் அனுபவித்துப் பயணிக்க விரும்பும் வாழ்க்கைப் பாதையாகப் பார்த்தால் வாழ்நாள் முழுக்க இதை ரசித்து வேலை செய்யலாம்.

என்னால் முடிந்தவரை இங்கே பதிவாக்கிவிட்டேன். இது எல்லோருக்கும் பொருந்தும் விஷயமாக இருந்தாலும் அதிகம் இயக்குநர்களை மனதில் கொண்டே எழுதப்பட்டது. மேற்கண்ட விஷயங்கள் யாருக்கும் தெரியாதது அல்ல. அடுத்தவருக்குச் சொல்லும் போது சரியாகவும் தனக்கென்று வருகையில் தவறாகவும் புரிந்துகொள்ளப்படுகிறது. அவ்வளவே!

மேலும் இது தனிப்பட்ட எவரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதும் அல்ல. இவ்வளவு காலம் நான் கண்ட, கேட்ட, உணர்ந்த விஷயங்களிலிருந்தே எழுதப்பட்டது. இதை யாரேனும் ஒருவராவது சரியாகப் புரிந்து அவருக்குப் பயன்பட்டாலே அது என் பெரும் பாக்கியம்''.

இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x