Published : 01 Mar 2020 02:17 PM
Last Updated : 01 Mar 2020 02:17 PM

வரவேற்பு மற்றும் வசூல்: 'திரெளபதி' படக்குழுவினர் மகிழ்ச்சி

'திரெளபதி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் வசூலால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'திரெளபதி'. கூட்டு நிதி முறையில் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் மோகன்.ஜி. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்துள்ளார்.

ஜனவரி மாதம் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. அப்போதிலிருந்தே இந்தப் படம் தொடர்பான சர்ச்சையும், விவாதமும் நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்தையும் கடந்து படத்தைத் தணிக்கை செய்து, பிப்ரவரி 28-ம் தேதி வெளியிட்டது படக்குழு.

பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டினார்கள். பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, இந்தப் படத்தை மிகவும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். இதைத் தாண்டி பல்வேறு ஊர்களில், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு புக் செய்யப்படும் டிக்கெட்கள் அளவுக்கு இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் இருந்துள்ளது.

இதனால் முதல் நாளே தமிழக திரையரங்க வசூல் 2 கோடிக்கு நிகராக கிடைத்துள்ளது. இதில் விநியோகஸ்தர்கள் பங்கு, திரையரங்குகள் பங்கு என கழித்து, ஷேர் தொகையாக மட்டும் 85 லட்ச ரூபாய் வரை கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த பொருட்செலவே 1 கோடி ரூபாய்க்கும் கொஞ்சம் அதிகம் என்கிறார்கள்.

முதல் நாள் வசூலே 85 லட்ச ரூபாய் வந்துவிட்டதால், இந்தப் படம் கண்டிப்பாகத் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்கிறார்கள். மேலும், இதுவரை தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் நாள் வசூல் தொகையிலேயே படத்தின் பட்ஜெட்டுக்கு நிகரான தொகை வசூலான முதல் படம் 'திரெளபதி' என்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x