Published : 26 Feb 2020 11:02 AM
Last Updated : 26 Feb 2020 11:02 AM

‘ஜுராசிக் வேர்ல்டு’ மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

1993 ஆம் ஆண்டு வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் 'ஜுராசிக் பார்க்'. ஸ்பீல்பெர்க் இயக்கிய இப்படம் இன்று வரை ஹாலிவுட் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இப்படத்தின் மூன்றாம் பாகம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தோடு ஜுராசிக் பார்க் படங்களை இயக்கும் பொறுப்பிலிருந்து ஸ்பீல்பெர்க் விலகிக் கொண்டார்.

அதன்பிறகு 14 வருடங்களுக்கு பிறகு ஜுராசிக் பார்க்கின் தொடர்ச்சியாக ‘ஜுராசிக் வேர்ல்டு’ படம் வெளியானது. க்றிஸ் ப்ராட் நடிப்பில் கோலின் ட்ரெவாரோ இயக்கிய இப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளியாகியிருக்கும் நிலையில் ‘ஜுராசிக் வேர்ல்டு’ மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. இப்படத்துக்கு ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் இயக்குநர் கோலின் ட்ரெவாரோ தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இதனை உறுதி செய்துள்ளார்.

அவெஞ்சர்ஸ் என்ட் கேம் பாணியில் முதல் பாகத்திலிருந்து தற்போது ஜுராசிக் படவரிசையில் நடித்த அனைவரும் இப்படத்தில் இடம்பெறுவார்கள் என்று நடிகர் க்றிஸ் ப்ராட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x