அருள்நிதி படத்தின் மூலம் இயக்குநராகும் 'எரும சாணி' விஜய்

அருள்நிதி படத்தின் மூலம் இயக்குநராகும் 'எரும சாணி' விஜய்
Updated on
1 min read

'எரும சாணி' யூ டியூப் பிரபலம் விஜய், அருள்நிதி நடிக்கவுள்ள படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

'கே 13' படத்தைத் தொடர்ந்து 'களத்தில் சந்திப்போம்' மற்றும் 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆகியவற்றை முடித்துள்ளார் அருள்நிதி. அதனைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவுள்ள படத்துக்கான கதைகள் கேட்கும் பணிகளைத் தொடங்கினார்.

அதில் 'எரும சாணி' யூ டியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய் கூறிய கதை, அருள்நிதிக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் இந்தப்படத்தை உடனே தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 'எரும சாணி' விஜய் பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். இவரது வீடியோக்கள் யூ டியூப் சேனலில் மிகவும் பிரபலம்.

மேலும், இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். இந்தப் புதிய படம் தொடர்பாக அரவிந்த் சிங் கூறுகையில், "கல்லூரி வாழ்வின் பின்னணியில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக் கதையைக் கூறியபோதே அதில் பல உற்சாகமிகு தருணங்களுடன் பரபரப்பும் நிறைந்திருந்தது.

இந்தப் படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் அருள்நிதியைத்தான் அணுகினோம். ஏனென்றால் அவருடைய 5 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளேன். இந்தக் கதை கேட்டவுடன் உற்சாகமாகி உடனே ஒப்புக் கொண்டார்” என்று தெரிவித்துள்ளார் அரவிந்த் சிங்.

இந்தப் படத்தில் அருள்நிதியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in