Published : 24 Feb 2020 09:28 PM
Last Updated : 24 Feb 2020 09:28 PM

உங்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும்: பிரசன்னாவுக்கு சினேகா வாழ்த்து

'மாஃபியா' படத்தின் வெற்றி உங்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் என்று பிரசன்னாவுக்கு சினேகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாஃபியா'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாகக் குறைவில்லை என்கிறார்கள். மேலும், இந்த வார நாட்களில் உள்ள வசூலைப் பொறுத்தே, படத்தின் வெற்றி - தோல்வி தெரியவரும்.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரசன்னாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ட்விட்டர் தளத்தில் தனது பக்கத்தைக் குறிப்பிட்டு வாழ்த்தும் அனைவருக்கும் பதிலளித்து வருகிறார் பிரசன்னா. மேலும், தனது கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்பவர்களுக்கும் பதிலளித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இதனிடையே, பிரசன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவருடைய மனைவி சினேகா.

'மாஃபியா' படத்தில் பிரசன்னாவின் கதாபாத்திரம் தொடர்பாக சினேகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "உங்களது பணி குறித்து என்றுமே பெருமைப்பட்டுள்ளேன். ஆனால், இந்த திவாகாரன் குமரன் கதாபாத்திரத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

மிகவும் ஸ்டைலாக, கச்சிதமாக, உண்மையாக இருந்தது. நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் என்றும் சிறந்தவர்தான். ஆனால், இது சிறந்ததையும் தாண்டி இருந்தது. உங்களை மக்கள் அங்கீகரிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைத்து அழைப்புகள், பாராட்டுகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. ரசிகர்களிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த உற்சாகம் உங்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்கும். 'மாஃபியா' குழுவுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார் சினேகா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x