Published : 21 Feb 2020 05:49 PM
Last Updated : 21 Feb 2020 05:49 PM

'தர்பார்' பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பு; பெரிய பட்ஜெட் படங்களுக்குச் சிக்கல்:  விநியோகஸ்தர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டுக் கூட்டத்தில் முக்கியமான 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் பெரிய பட்ஜெட் படங்களுக்குச் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

'தர்பார்' படத்தின் சர்ச்சை, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் படங்கள் வெளியீடு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஒன்று கூடினர். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் இதர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

அவை பின்வருமாறு:

* தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால், இரு தரப்பினரும் இணைந்து மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளிப்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

* ’தர்பார்’ திரைப்படத்தினை விநியோகம் செய்த வகையில் எழுந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதத்தில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து ’தர்பார்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் அந்த திரைப்படத்தில் பங்குபெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் அவர்களிடம் தார்மீக ரீதியில் அணுகி மேற்படி பிரச்சினை குறித்துப் பேசி சுமுகத் தீர்வு காண்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

* புதிய திரைப்படம் வெளியாகி 8-வார காலத்திற்கு முன்பு Digital Platform என்று அழைக்கப்படும் Amazon, Netflix போன்றவற்றில் வெளியிடக் கூடாது என்றும், தற்போது பாலிவுட்டில் பின்பற்றப்படும் நடைமுறை போலவே இங்கு தமிழகத்திலும் பின்பற்றப்பட வேண்டும் எனத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

* புதிய திரைப்படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்பாக எந்த ஒரு தொலைக்காட்சியிலும் அந்தத் திரைப்படம் ஒளிபரப்பக் கூடாது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

* திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கட்டண விகிதாச்சாரத்தையும் சரிசெய்யத் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திலிருந்து 9 நபர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து 9 நபர்கள் ஆக மொத்தம் 18 நபர்கள் எனக் கொண்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு அதனை இனிவரும் காலங்களில் முறைப்படுத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.

* இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை MG/Outrate அடிப்படையில் விநியோகம் செய்யும் சூழ்நிலை வரும் நிலையில் படத்தினை திரையிட்டுப் பார்க்காமல் வியாபாரம் செய்வது இல்லை என்று இரு தரப்பினரும் ஒரு மனதாக முடிவு செய்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x