Published : 20 Feb 2020 09:05 PM
Last Updated : 20 Feb 2020 09:05 PM

வெற்றிமாறன் குதி என்றால் குதித்துவிடுவேன்: சமுத்திரக்கனி

வெற்றிமாறன் குதி என்றால் குதித்துவிடுவேன் என்று 'சங்கத்தலைவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமுத்திரக்கனி பேசினார்.

மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தலைவன்'. வெற்றிமாறன் மற்றும் உதயா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் இணைந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குநர் சமுத்திரக்கனி பேசியதாவது:

இறைவனுக்கு நன்றி. வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ’விசாரணை’ படம் பண்ணும் போது ஒரு நாள் இரவு 12 மணிக்கு போன் பண்ணி, எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அலுவலகத்தில் என்றவுடன் வாருங்கள் கொஞ்சம் பேச வேண்டும் என்றார். உடனே போனேன். இது தான் கதை, இப்படி எல்லாம் இருக்கும் என்று சொன்னார். ஒ.கே சார், உடனே போகலாம் என்றேன்.

அதே மாதிரி தான் 'சங்கத்தலைவன்' படத்துக்கும் அழைத்தார். இது தான் கதை, இப்படி எல்லாம் இருக்கும், மணி தான் இயக்குநர் என்றார். அப்படியா சார், போகலாம் சார் என்றேன். கருணாஸ் சார் சொன்ன மாதிரி எல்லாம் இல்லை. வெற்றிமாறன் சார் குதி என்றால் குதித்துவிடுவேன் அவ்வளவு தான். அது தான் எனக்கு வெற்றி சாருக்கும் இடையே உள்ள அன்பு.

நான் வியக்கக் கூடிய நட்பு மணிமாறனும் வெற்றிமாறனும் இடையே இருக்கும் நட்பு தான். பாரதி சார் எழுதிய தறியுடன் படைப்பு நல்ல, உண்மையான, நேர்மையான ஒரு படைப்பு. அதை அப்படியே ராவாக பண்ண வேண்டும் என்று மணிமாறன் இயக்கியுள்ளார். அதற்கு உண்மையாக நாங்கள் உழைத்திருக்கிறறோம். வி.ஜே.ரம்யா பிரமாதமாக நடித்துள்ளார்.

கருணாஸ் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் அவர் கதாபாத்திரம் வேறமாதிரி இருக்கும். ஒரு முடிவெட்டுகிற கடைக்குள் இருவரும் பேசும் காட்சி அற்புதமாக வந்துள்ளது. இப்போது கூட எங்க அம்மாவுக்கு தொலைபேசியில் அழைத்தால், ஒரு கைத்தறி சத்தம் கேட்கும். அந்தச் சத்துக்குள்ளேயே தான் வளர்ந்தேன். அதன் பாதிப்பில் தான் 'நாடோடிகள்' படத்தில் பின்புலத்தில் வைத்திருந்தேன். அதைப் பற்றிய முழுமையாகப் பதிவில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது பாக்கியமாகவே நினைக்கிறேன்.

எங்க ஊரில் வீராசாமி என்று ஒருவர் இருந்தார். அவரோடு யாருமே சேரமாட்டார்கள். ஏனென்றால் அவர் ரொம்ப நல்லவர் என்பார்கள். ரொம்ப நல்லவர் என்பதால் ஏதேனும் பிரச்சினையில் இழுத்துவிட்டு விடுவார் என்ற பயம் தான். சிகப்பு துண்டு போட்டிருப்பார். ஊரில் என்ன பிரச்சினை என்றாலும் தைரியமாகத் தனி ஆளாகச் சென்று பேசக் கூடிய ஒரு மனிதர். ஆனால், சமூகம் அவரோடு சேரவே சேராது. அவரைத் தான் இந்தப் படத்தில் நடிக்கும் போது நினைத்தேன். அவருக்குக் கூட இந்தப் படத்தைக் காணிக்கையாக வைத்துக் கொள்ளலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x