Published : 20 Feb 2020 12:01 PM
Last Updated : 20 Feb 2020 12:01 PM

ஒருநொடிப் பொழுதுதான்; எங்கள் கூடாரத்திலிருந்து வெளியே குதித்தோம்: 'இந்தியன் 2' விபத்து குறித்து ஸ்டைலிஸ்ட் பகிர்வு

ஒருநொடிப் பொழுதுதான். எங்கள் கூடாரத்திலிருந்து வெளியே குதித்தோம் என்று 'இந்தியன் 2' விபத்து குறித்து ஸ்டைலிஸ்ட் சீமா பகிர்ந்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் 'இந்தியன் 2'. இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. தற்போது படத்தின் சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குநர் மது மற்றும் தயாரிப்பில் உதவியாக இருந்த சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் இயக்குநர் ஷங்கர், கமல் உள்ளிட்டோர் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்தின் போது நடந்த நிகழ்வினை ஸ்டைலிஸ்ட் சீமா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில், "தூக்கமில்லாத இரவு. என்னால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கமல்ஹாசன், காஜல் அகர்வாலோடு சேர்ந்து அந்த கிரேனின் கீழ் நானும் இறந்திருக்க வேண்டும். நாங்கள் தப்பித்துவிட்டோம் என்று உணர்ந்தபோது இன்னொரு பக்கத்திலிருந்து இறந்தவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம். அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஒரு பெரிய விபத்திலிருந்து கமல்ஹாசனுடன் சேர்ந்து தப்பித்திருக்கிறேன். ஒருநொடிப் பொழுதுதான். எங்கள் கூடாரத்திலிருந்து வெளியே குதித்தோம். திரும்பிப் பார்க்கும்போது எங்களது நாற்காலிகள் பெரிய கிரேனால் நொறுக்கப்பட்டிருந்தன. இதோ சில புகைப்படங்கள். எங்கள் மூன்று நண்பர்களை இழந்தது துரதிர்ஷ்டம். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார் சீமா.

’இந்தியன் 2’ விபத்து தொடர்பாகப் பலரும் படக்குழுவினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

விபத்தைத் தொடர்ந்து மறுபடியும் எப்போது படப்பிடிப்பு என்று சொல்கிறோம் எனப் படத்தில் பணிபுரியும் அனைவருக்குமே படக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x