Published : 20 Feb 2020 10:32 AM
Last Updated : 20 Feb 2020 10:32 AM

நூலிழையில் உயிர் தப்பிய அனுபவம்: காஜல் அகர்வால் அதிர்ச்சி

'இந்தியன் 2' படப்பிடிப்புத் தளத்தின் விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய அனுபவம் குறித்து காஜல் அகர்வால் ட்வீட் செய்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இதன் முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே உள்ள நசரத்பேட்டை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து, அங்கு கமல் - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வந்தார்கள்.

சண்டைக்காட்சி என்பதால் பிரம்மாண்ட கிரேன் மூலம் விளக்குகள் அமைத்து, படமாக்கி வந்தார் ஷங்கர். இதில் நேற்று (பிப்ரவரி 19) கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

இறந்தவர்கள் ஷங்கரின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிருஷ்ணா (34), மற்றும் ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தின்போது படப்பிடிப்புத் தளத்திலிருந்த காஜல் அகர்வால் தனது மனநிலையை ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில், "என்னுடன் பணியாற்றியவர்களின் எதிர்பாராத மரணம், எனக்குத் தரும் மனவலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது. உங்கள் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், அன்பு. தனிமையான இந்தத் தருணத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமையைத் தரட்டும்.

நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். உயிரோடு இருந்து இந்த ட்வீட்டைப் பதிவேற்ற ஒரு நொடி மட்டுமே ஆனது. அந்த ஒரு தருணம். நன்றியுணர்வோடு இருக்கிறேன். நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x