Published : 19 Feb 2020 07:32 PM
Last Updated : 19 Feb 2020 07:32 PM

'திரெளபதி' தணிக்கையில் நடந்தது என்ன? - இயக்குநர் மோகன்.ஜி விளக்கம்

'திரெளபதி' தணிக்கையில் நடந்தது என்ன என்பது குறித்து இயக்குநர் மோகன்.ஜி விளக்கம் அளித்துள்ளார்.

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'திரெளபதி'. ஜனவரி 3-ம் தேதி இணையத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் உள்ள காட்சிகளும், வசனங்களுமே பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் உண்டாக்கியது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், இந்தப் படம் தொடர்பாக பல்வேறு புகார்களும் குவிந்தது.

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் தணிக்கைப் பணிகளும் முடிவடைந்து பிப்ரவரி 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் தணிக்கையில் பல்வேறு கட்கள் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக இயக்குநர் மோகன்.ஜி தனது ஃபேஸ்புக் வீடியோவில் விளக்கமளித்துள்ளார்.

மோகன்.ஜி-ன் வீடியோ பதிவில் இந்தப் படத்துக்கு உதவியவர்கள், திரையரங்குகள் ஒப்பந்தம் தொடர்பாகப் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும், தணிக்கைப் பிரச்சினைத் தொடர்பாக மோகன்.ஜி "இந்தப் படம் திரையரங்கிற்கு வருவதே ஒரு வெற்றி. கூட்டு முயற்சியில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். பிப்ரவரி 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரெய்லருக்கு பெரிய ஆதரவு கொடுத்துள்ளீர்கள்.

படத்தின் தணிக்கையில் 14 இடங்களில் மியூசிக் கட் என்பது சாதாரணம் தான். அது ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரை முன்வைத்து சிலபல புகார்கள் இருந்தது. பலரும் புகார் அளித்தால், படத்தைத் தணிக்கை அதிகாரிகள் ரொம்பவே கவனமாகப் பார்த்தார்கள். படத்தின் முதல் பாதியில் வரும் முதல் 20 நிமிடங்களில் சில மட்டுமே. கொஞ்சம் சாதி ரீதியாக எதுவும் இருக்க வேண்டாம் என்றே சில கட் கொடுத்துள்ளார்கள். அது படத்தைப் பாதிக்காது.

ஏனென்றால், படத்தில் வரும் சில வசனங்களை மட்டுமே மியூட் கொடுத்துள்ளார்கள். சில விஷயங்களை மறைக்கச் சொன்னார்கள். அதையும் செய்துள்ளோம். படத்தில் ஒரு காட்சியைக் கூட நீக்கச் சொல்லவில்லை. இந்தப் படம் எந்த நோக்கத்துக்காக எடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் ஒரு எள்ளளவு கூட குறையாமல் வந்து சேரும். இந்த விழிப்புணர்வு நிச்சயமாக ஏற்பட்டே தீரும்.

இது அனைத்து சமூகத்துக்குமான விழிப்புணர்வு தான். இதில் யாரையும் பெருமைப்படுத்தியோ, சிறுமைப்படுத்தியோ செய்த விழிப்புணர்வு அல்ல. அனைத்து தந்தை - மகளுக்குமான விழிப்புணர்வு. பாதிக்கப்படாமல் எந்தளவுக்கு விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.

சில உண்மைகளைப் பேசும் போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அதைச் சந்திப்பதில் தான் வெற்றி இருக்கிறது. நல்லபடியாகச் சந்திப்போம். கண்டிப்பாகத் தணிக்கை செய்யப்படாத படம் இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமை யார் வாங்குகிறார்களோ அல்லது யூ-டியூப் பக்கத்திலேயோ நிச்சயமாகப் பதிவேற்றப்படும். " என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் மோகன்.ஜி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x