Published : 19 Feb 2020 03:57 PM
Last Updated : 19 Feb 2020 03:57 PM

என் கணவரால்தான் இந்த மேடையில் நிற்கிறேன்: குஷ்பு நெகிழ்ச்சி

என் கணவரால்தான் இந்த மேடையில் நிற்கிறேன். அவர்தான் என் பக்கபலம் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் குஷ்பு.

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் கடந்த 14-ம் தேதி ரிலீஸான படம் ‘நான் சிரித்தால்’. ராணா இயக்கிய இந்தப் படத்தில், ஐஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிகுமார், படவா கோபி, முனீஸ்காந்த், ரவிமரியா, யோகி பாபு, ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி - குஷ்பு இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹிப் ஹாப் ஆதியின் படத்தை அவ்னி மூவிஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் வெற்றி விழா, நேற்று (பிப்ரவரி 18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய குஷ்பு, “அவ்னி மூவிஸ், முழுக்க முழுக்க சுந்தர்.சி மற்றும் என்னுடைய கனவு. சின்ன வயதில் இருந்து சினிமாவில் இருப்பதால், எனக்கு வேறு பிசினஸ் எதுவும் தெரியாது. என் கணவரும் அப்படித்தான். அதனால்தான் சினிமா சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடங்கினோம். இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு முழுக் காரணம், சுந்தர்.சி மட்டுமே.

என்னுடைய மிகப்பெரிய பக்கபலம் என் கணவர். அவர் இல்லையென்றால் நான் இல்லை. அவரால்தான் நான் இந்த மேடையில் நிற்கிறேன். ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும், அவர் முன்னால் வரமாட்டார். பின்னால் இருப்பார். நான் தைரியமாக முன்னால் போகக் காரணம், நான் விழுந்தாலும் பிடிக்க பின்னால் அவர் இருக்கிறார்.

அந்த தைரியத்தில் முன்னால் போய்க்கொண்டே இருக்கிறேன். எனவே, இந்த மேடையில் என் கணவருக்கு நன்றி சொன்னால் தவறாக இருக்காது என நினைக்கிறேன். நன்றி மிஸ்டர் சுந்தர்.சி” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x