Published : 19 Feb 2020 01:35 PM
Last Updated : 19 Feb 2020 01:35 PM

மிகச்சிறந்த கவுரவம்: தீபிகா படுகோன் நெகிழ்ச்சிப் பதிவு

கபில் தேவ் மற்றும் அவரது மனைவி ரோமி தேவ் தோற்றத்தில் ரன்வீர் மற்றும் தீபிகா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். மேலும், 1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியிலிருந்த வீரர்களாக பல்வேறு நாயகர்கள் கடும் பயிற்சி செய்து நடித்துள்ளனர்.

இந்தப் படம் இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை கபீர்கான், தீபிகா படுகோன், விஷ்ணு இந்தூரி, சஜீத் நாதியத்வாலா, ஃபேண்டம் பிலிம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழில் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து வெளியிடவுள்ளது.

'83' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 25-ம் தேதி அன்று நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடன் கபில்தேவ், கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் சிறப்பு விருந்தினராக கமலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இப்படத்தில் கபில் தேவ் மற்றும் அவரது மனைவி ரோமி தேவ் தோற்றத்தில் ரன்வீர் மற்றும் தீபிகா இருக்கும் புகைப்படத்தை ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று (19.02.20) வெளியிட்டது.

வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இப்புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது. ரசிகர்கள் பலரும் இப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தீபிகா படுகோன் கூறுகையில், ''விளையாட்டு வரலாற்றின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றைப் பதிவு செய்யும் ஒரு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு மிகச்சிறந்த கவுரவம். ஒரு கணவரின் வெற்றியிலும், நோக்கங்களிலும் ஒரு மனைவியின் பங்களிப்பை என் தாய் மூலமாக நான் மிக நெருக்கத்தில் கண்டிருக்கிறேன். '83' படம் எனக்குப் பலவழிகளில் ஒரு மனைவி தனது கனவுகளுக்கு முன்னால் தன் கணவனின் கனவை வைக்கும் ஒரு கவிதையாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x