Published : 19 Feb 2020 10:23 AM
Last Updated : 19 Feb 2020 10:23 AM

இந்திய வரலாற்றிலேயே முதல் முறை: ரூ.10,000 கோடியைக் கடந்த 2019 பாக்ஸ் ஆபீஸ் வசூல்

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக 2019 ஆம் ஆண்டு வெளியான படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.10,000 கோடியைக் கடந்துள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்மேக்ஸ் மீடியா என்ற நிறுவனம் 2019 ஆம் ஆண்டு பாக்ஸ் ஆபீஸ் வசூல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு அனைத்து மொழிகளிலும் வெளியான படங்களின் மொத்த வசூல் ரூ.10,948 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது 2018 ஆம் ஆண்டை விட 12 % அதிகமாகும். 2018 ஆம் ஆண்டு வசூலான மொத்த தொகை ரூ.9,810 கோடி.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எப்போதும் இல்லாதவகையில் ஹாலிவுட் படங்களின் வசூல் (டப்பிங் சேர்த்து) 31% சதவீதம் அதிகரித்துள்ளது. ஹாலிவுட் படங்கள் கடந்த ஆண்டு வசூலித்த மொத்த தொகை ரூ. 1,595 கோடி. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை இந்தி படங்களே பாக்ஸ் ஆபீஸில் முன்னனியில் இருந்து வந்தன. அதற்கு அடுத்த இடங்களில் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹாலிவுட் படங்கள் இருக்கும்.

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியப் படங்களை பின்னுக்குத் தள்ளி அதிக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் முதல் இடத்தைப் பிடித்தது மார்வெல் நிறுவனத்தின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’. ஆங்கிலம் உட்பட டப்பிங் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் இப்படம் வசூலித்த தொகை ரூ.425 கோடி. இதற்கு அடுத்த இடங்களை ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘வார்’ (ரூ. 357 கோடி) மற்றும் பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ (ரூ.349 கோடி) ஆகிய படங்கள் பிடித்தன.

இது குறித்து ஆர்மேக்ஸ் மீடியா தலைமை அதிகாரி சைலேஷ் கபூர் கூறுகையில், “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்துக்குப் பிறகு, ‘தி லயன் கிங்’ படம் வெளியான அனைத்து மொழிகளிலும் ரூ.184 கோடி வசூலித்துள்ளது. பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ தெலுங்கு, தமிழைக் காட்டிலும் இந்தியில் 60% அதிகம் வசூலித்துள்ளது. 'சைரா நரசிம்ம ரெட்டி' ரூ.196 கோடி வசூலித்து முதல் 10 இடங்களுக்குள் வருகிறது. ஹாலிவுட் மற்றும் தென்னிந்தியப் படங்கள் இந்தி சினிமாவுக்கு தொடர்ந்து சவாலாக விளங்குகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x