Published : 17 Feb 2020 10:50 AM
Last Updated : 17 Feb 2020 10:50 AM

மூளைக் கட்டியால் 15 வயது இளம் நடிகை மரணம்

உகாண்டாவைச் சேர்ந்த 15 வயது இளம் நடிகை நிகிதா பியர்ல் மூளைக் கட்டியால் மரணமடைந்தார்.

டிஸ்னி நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘குயின் ஆஃப் காத்வே’. இப்படத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான மீரா நாயர் இயக்கியிருந்தார். இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நிகிதா பியர்ல் வாலிக்வா.

உகாண்டாவைச் சேர்ந்த நிகிதா கடந்த சில நாட்களாக மூளையில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (15.02.20) அன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நிகிதா பியர்ல் மரணமடைந்தார். 15 வயதே நிரம்பிய நிகிதாவின் மரணம் உகாண்டா மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிகிதா மரணமடைந்த செய்தியை அவரது பள்ளி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. அதில், ''சென்று வா நிகிதா. நீ பலருக்கும் பிரியமானவளாய் இருந்தாய். இந்தச் சிறிய வயதில் மூளைக் கட்டிக்கு உன்னை நாங்கள் இழந்திருக்கிறோம். உன்னுடைய ஆன்மா சாந்தி அடையட்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகிதாவின் மரணத்துக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x