Published : 14 Feb 2020 10:42 AM
Last Updated : 14 Feb 2020 10:42 AM

'தமிழகத்தைக் காப்பாற்றுங்கள் மாஸ்டர் ஜோசப் விஜய்'.. மதுரையில் நடிகர் விஜய்க்கு போஸ்டர்

மதுரை

நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேற்று மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்தப் போஸ்டரில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒருபுறம், அரசியல் ஆலோசகர் பிரசாந்த கிஷோர் மறுபுறம் அமர்ந்திருக்க நடுவில் விஜய் புன்னகை பூக்க, "ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம்,. கலங்கிநிற்கும் தமிழகத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதில், நடிகர் விஜய்யை மாஸ்டர் சோசப் விஜய் எனக் குறிப்பிட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. நடிகர் விஜய்யை பொதுவாக பாஜகவினர், இந்துத்துவா கட்சியினர் மட்டுமே ஜோசப் விஜய் என்று அழைத்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களும் அவ்வாறு சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

மதுரை மத்திய தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜய் ரசிகர் கவுதம், "தமிழகத்தின் நிலையைக் கருதியே இந்த போஸ்டரை ஒட்டியுள்ளோம். இது எங்களின் விருப்பம் மட்டுமல்ல தமிழகத்தில் நிறைய பேரின் விருப்பம் இதுவே. அதையே நாங்கள் போஸ்டராக ஒட்டியுள்ளோம்.

இதற்குப் பின்னால் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. யாருடைய தூண்டுதலும் இல்லை. ஆந்திராவில் இப்போது அரசியல் நிலவரம் சீராக இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். அதேபோல் தமிழ்நாட்டிலும் சீராக தளபதி அரசியல் களமிறங்க வேண்டும் என்று வரவேற்று இந்தப் போஸ்டர்களை ஒட்டியுள்ளோம்" என்றார்.

இதேபோல் மதுரையில் விஜய்க்கு இன்னொருவிதமான போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது. அதில், உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன் என்ற திருக்குறள் அச்சிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை தளபதி விஜய் தலைமை மக்கள் இயக்கத்தின் மதுரை மாவட பொருளாளர் என்.சதீஸ்குமார் ஒட்டியுள்ளார்.

அண்மையில் நடிகர் விஜய் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நெய்வேலியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் விஜய் ரசிகர்கள் ஏராளமாகத் திரண்டனர். தற்போது அவருக்கு ஆதரவாக, அவரை அரசியலுக்கு வரவேற்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x