Last Updated : 13 Feb, 2020 12:11 PM

 

Published : 13 Feb 2020 12:11 PM
Last Updated : 13 Feb 2020 12:11 PM

திரைப்பட நடிகர் எனும் புகழால் ஏற்படும் ஈகோவைக் கொல்லவே நாடகங்களைத் தேடிப் பார்க்கிறேன்: நாசர்

நாடகத் திருவிழாவை குத்து விளக்கேற்றித் தொடங்கி வைக்கும் நாசர்.

புதுச்சேரி

திரைப்பட நடிகர் எனும் புகழால் தனக்கு ஏற்படும் ஈகோவைக் கொல்லவே நாடகங்களை நாடி, தேடிப் பார்க்கிறேன். பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றாலும் தமிழக குக்கிராமத்தில் நடிக்கும் நாடக நடிகனை விட நான் உயர்ந்தவனில்லை என்று திரைப்பட நடிகரும் இயக்குநருமான நாசர் தெரிவித்தார்.

டெல்லி தேசிய நாடகப் பள்ளியின் பாரத் ரங் மஹோத்ஸவ் ஒரு வார நாடகத் திருவிழா முதல் முறையாக புதுச்சேரி ஆரோவில்லில் நடைபெறுகிறது. உலகத்தரம் வாய்ந்த நாடகங்கள் வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்வை ஆரோவில் ஆதிசக்தி அரங்கில் திரைப்பட நடிகரும் இயக்குநருமான நாசர் நேற்று (பிப்.12) இரவு 7 மணியளவில் தொடங்கி வைத்தார்.

தொடக்க நாடகத்தைப் பார்த்த பிறகு நாசர் பேசியதாவது:

"கலைக்கு மொழி இல்லை. நான் நடிக்க வந்ததே விபத்துதான். எனக்கு டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் படிக்க ஆசை. ஆனால், எனது கல்வித்தகுதி அதற்கு இடம் தரவில்லை. நவீன நாடகத்தில் நடிப்பைக் கற்க என் மகனை அனுப்பினேன். அதன் பின்பு அவன் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்ற முடிவை என்னிடம் தெரிவித்தது அதிர்ச்சியாக இருந்தாலும், தொடர்ந்து இத்துறையில் இருப்பதாகவும், இயக்குநராக மாறுவேன் என்றும் கூறியதே இக்கலையின் வீச்சுக்கு உதாரணம்.

நான் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடிக்கிறேன். பாகுபலி நடிகராக மக்களால் பார்க்கப்படுகிறேன். பல மொழிகளில் நடித்து திரைப்பட நடிகனாகப் புகழ் பெற்றாலும், தமிழகத்தின் குக்கிராமங்களில் மக்கள் முன்பு நடிக்கும் நாடக நடிகனை விட நான் உயர்ந்தவனில்லை. நாடகம் மக்கள் கலை. திரைப்பட நடிகர் எனும் புகழால் எனக்கு ஏற்படும் ஈகோவைக் கொல்லவே நாடகங்களை தேடித்தேடிப் பார்க்கிறேன். டிஜிட்டலைச் சமாளிப்பதுதான் தற்போதைய சவால். நாடகம் மக்கள் கலையாக இருப்பதால் மக்களுக்கு மிக நெருக்கமானது".

இவ்வாறு நாசர் பேசினார்.

தேசிய நாடகப் பள்ளியின் தலைவர் முனைவர் அர்ஜூன் தியோ சரண் தலைமை வகித்தார். தொடக்க நாளில் சுவீரன் எழுதி இயக்கிய 'பாஸ்கரப் பட்டேளரும் தொம்மியுடே ஜீவிதமும்' என்ற மலையாள நாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்நாடகம் பால்சக்கரியாவின் குறுநாவலைத் தழுவி எழுதப்பட்ட நாடகம். இந்நாடகம், நாடக ஆர்வலர்களுக்கு உன்னத அனுபவம் தந்தது.

தொடக்க நாளில் நிகழ்த்தப்பட்ட நாடகம்

மொத்தமாக இந்நாடக விழாவில் இரண்டு மலையாள நாடகங்கள், தமிழ், கன்னடம் மற்றும் ஒரிய மொழிகளில் தலா ஒன்று, வங்க தேசம் மற்றும் செக் குடியரசு நாட்டு நாடகங்கள் முறையே வங்கம் மற்றும் ஆங்கிலத்தில் நடக்கும். மொத்தம் 7 நாடகங்களைப் பார்க்கலாம். அனுமதி இலவசம்.

குறிப்பாக 13-ம் தேதி, இன்று மாலை ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் தமிழ் வடிவில் ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள இன்டியனோஸ்ட்ரம் தியேட்டரில் நடைபெறுகிறது. அதையடுத்து வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ஆதிசக்தி அரங்கில் நாடகங்கள் நடைபெறும். 14-ம் தேதி கன்னட நாடகம் 'பர்ஷிவா சங்கீதா'வும், செக் குடியரசு தரப்பில் 15-ம் தேதி ஷேக்ஸ்பியரின் 'ரிட்டச்சர்ட் 3' ஆங்கிலத்திலும் நடைபெறுகிறது.

தினந்தோறும் நாடகத்துக்கு முன்னதாக நாட்டார் கலைகள், பாரம்பரிய நடன நிகழ்வுகளும் நடப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தவறவிடாதீர்!

'சைக்கோ' ஒரு படமா? 'பாரம்' தான் படம்: மிஷ்கின் கலகலப்பான பேச்சு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x