Published : 10 Feb 2020 03:37 PM
Last Updated : 10 Feb 2020 03:37 PM

’சூரரைப் போற்று’ பாடல் வெளியீட்டில் பிரம்மாண்டம்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்தப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.

'என்.ஜி.கே' படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' படத்தில் நடித்துள்ளார் சூர்யா. கோடை விடுமுறை வெளியீடாக இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. 2டி நிறுவனமும், குனீத் மோங்காவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தப் படத்தைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு 'வெய்யோன் சில்லி' என்ற பாடல் பிப்ரவரி 13-ம் தேதி வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் பாடலை சென்னை விமான நிலையத்தில் வைத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனுமதி பெறுவதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. விரைவில், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் வைத்து ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். படமும் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியது என்பதால் விமான நிலையத்தில் வைத்து வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும் எனப் படக்குழுவினர் கருதியுள்ளனர்.

நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சூர்யா.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x