Published : 09 Feb 2020 04:53 PM
Last Updated : 09 Feb 2020 04:53 PM

அஜித்தை இயக்கவுள்ளதாக வெளியான ட்வீட்: கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு

அஜித்தை இயக்கவுள்ளதாக வெளியான ட்வீட்டுக்கு, அது தனது ட்விட்டர் பக்கமே இல்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அஜித் - கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் 'வில்லன்' மற்றும் 'வரலாறு' படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். இரண்டுமே வெற்றி படங்களாக அமைந்தது. அதற்குப் பிறகு இருவரும் இணைந்து பணிபுரியவில்லை.

இதனிடையே, கே.எஸ்.ரவிக்குமார் ஃபேஸ்புக் தளத்தில் மட்டுமே இருக்கிறார். ட்விட்டர் தளத்தில் அவர் இல்லை. ஆனால், அவருடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி, அவருடைய படங்கள் தொடர்பாக ட்வீட் செய்து வந்தார்கள்.

இந்த தளத்தில் நேற்று (பிப்ரவரி 8) "உங்கள் அனைவரது அன்பு மற்றும் ஆசீர்வாதத்துடன் எனது படத்தில் அஜித்குமார் சாருடன் இணைந்து பணிபுரியவுள்ளேன். 17 ஆண்டுகள் கழித்து ஒரு சிறந்த நடிகருடனும், சிறந்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் பணிபுரிவதிலும் மகிழ்ச்சி. ஆகஸ்ட் மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கும்" என்று பதிவிட்டார்கள். இந்த ட்வீட் பெரும் வைரலானது.

கே.எஸ்.ரவிக்குமாருக்கு பலரும் தொலைபேசி வாயிலாகவும், குறுந்தகவல் மூலமாகவும் வாழ்த்துச் சொல்லத் தொடங்கினார்கள். இது தொடர்பாக கே.எஸ்.ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பதிவில் "நேற்று முதல் எனது பெயரில் இயங்கி வரும் ட்விட்டர் தளத்தில் அஜித்குமார் படத்தை இயக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அந்தச் செய்தி தவறானது. எனக்கு ட்விட்டர் தளத்தில் எந்தவொரு கணக்குமே இல்லை. அந்த ட்விட்டர் கணக்கு போலியானது. அந்தப் பக்கத்தில் வரும் எந்தவொரு செய்தியையும் நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அஜித் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாக வெளியான ட்வீட் மற்றும் செய்தி பொய்யானது என்பது தெளிவாகியுள்ளது.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x