Published : 09 Feb 2020 09:29 AM
Last Updated : 09 Feb 2020 09:29 AM

4 நாட்கள் நடைபெற்ற சோதனை நிறைவு: விஜய் உட்பட 3 பேருக்கு சம்மன் அனுப்ப வருமானவரி துறை முடிவு

சென்னை

நடிகர் விஜய் உட்பட 3 பேருக்கு சம்மன் அனுப்ப வருமானவரித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படம் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை குவித்தது. அந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலானதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதை உறுதிப்படுத்தும் வகையில், அந்த படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் ‘பிகில்’ படம் வசூல் சாதனை படைத்ததாக தெரிவித்தது.

இந்நிலையில் வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரிகள், ‘பிகில்’ பட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரத்தின் சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 5-ம்தேதி சோதனையை தொடங்கினர். இதில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் மதுரை மற்றும் சென்னை வீடு, அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வருமானவரி சோதனையில் ‘பிகில்’ பட தயாரிப்பு நிறுவனம் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதால், விஜய்யும் இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.

‘மாஸ்டர்’ படப்பிடிப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமானவரித் துறை அதிகாரிகள் கையோடு அழைத்துக் கொண்டு சென்னை வந்தனர். கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள அவருடைய வீட்டை சோதனையிட்டனர்.

அதேபோல், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.77 கோடி சிக்கியது. மேலும் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது.

பணம் பரிமாற்ற ஆவணங்கள்

நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், கல்பாத்தி அகோரம் ஆகியோருக்கு ஓரிருநாளில் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய வருமானவரித் துறை முடிவு செய்துள்ளது.

இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள், சொத்து ஆவணங்கள், பணம் பரிமாற்ற ஆவணங்கள் தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x