Published : 08 Feb 2020 12:53 PM
Last Updated : 08 Feb 2020 12:53 PM

சினிமாவுக்குள் அரசியலைக் கொண்டு வராதீர்கள்: பாஜக போராட்டம் தொடர்பாக ஆர்.கே.செல்வமணி காட்டம்

சினிமாவுக்குள் அரசியலைக் கொண்டு வராதீர்கள் என்று 'மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்தில் பாஜக போராட்டம் தொடர்பாக ஆர்.கே.செல்வமணி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் நேற்று (பிப்ரவரி 7) மாலை பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு உண்டானது. அவர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்களும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களைக் கலைக்க போலீஸார் சிறிதாக தடியடி நடத்தினார்கள்.

இந்தப் போராட்டம் தொடர்பாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் பேசும் போது, ”'மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தால் பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதிரியான போராட்டத்தால் திரைப்படத் துறையில் பெரிய அளவில் பிரச்சினை வரவிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் போராட்டத்தை பெப்சி அமைப்பு கண்டிக்கிறது.

இந்த மாதிரியான போராட்டங்களால், தமிழ்நாட்டுக்கு வெளியே படப்பிடிப்பைக் கொண்டு போய்விடுகிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு 'அரவிந்தன்' படத்தின் படப்பிடிப்பில் ஒருவர் காயமடைந்தார், எப்போது வந்து தகராறு பண்ணுவது? இதில் என்ன நியாயம் இருக்கிறது. அரவிந்தன் படத்துக்குப் பிறகு 16 படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்துள்ளது. அப்போது எல்லாம் பண்ணாதவர்கள் இப்போது பண்ணுவது ஏன்?

பெரிய ஹீரோக்களில் விஜய் படம் மட்டும் தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. ரஜினி, அஜித் உள்ளிட்டோர் நமக்கு ஏன் பிரச்சினை என்று வெளிமாநிலத்துக்கு ஷுட்டிங்கை மாற்றி விடுகிறார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 1000 கோடி ரூபாய் பணம் வெளியே போய்விடுகிறது.

நெய்வேலியில் நடைபெற்றுள்ள இந்தப் போராட்டம் முறையல்ல. நியாயமற்றது. அரசு அனுமதியுடன் தான் படப்பிடிப்பு நடக்கிறது. அங்கு படப்பிடிப்பு நடப்பதால் நெய்வேலி மக்களுக்குக் குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய் மதிப்புக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும். ஹோட்டல் ரூம் புக்கிங், கார் புக்கிங், ஹோட்டல் என அனைத்து வியாபாரமும் நடக்கும். இந்தப் போராட்டத்தால் அது மறுக்கப்படும்.

முன்பு வெளிமாநிலம், வெளிநாட்டுக்குப் படப்பிடிப்புக்குச் சென்றால் அங்குள்ள லொகேஷனுக்காகச் செல்வார்கள். சமீபத்தில் அஜித் சார் படத்தோட ஷுட்டிங்கிற்காக தேனியில் உள்ள கோயிலை அங்கு செட் போட்டு படமாக்கியுள்ளனர். அங்கு ஒரு நாளைக்கு 2000 பேர் வரை பணிபுரிகிறார்கள். ஏன் போகிறார்கள் என்றால் இங்கு தொந்தரவு வரும் என்பது தான் காரணம்.

அதே படம் தேனியில் மட்டும் நடந்திருந்தால் குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் தேனி மக்களுக்குக் கிடைத்திருக்கும். சென்னையில் நடந்தால் தொழிலாளர்கள் சம்பளம் மட்டும் 2 கோடி ரூபாய் வரை வந்திருக்கும். இப்போது ஒட்டுமொத்தமாகப் போனது யாரால், இப்படிப்பட்ட முறையற்ற போராட்டத்தால் தமிழ் சினிமாவைத் துரத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நீங்கள் செய்யும் சிறு விஷயங்கள் தமிழ் சினிமாவை மோசமாகப் பாதிக்கிறது. அரசியலை அரசியலோடு நிறுத்திக் கொள்ளுங்கள். சினிமாவுக்குள் அரசியலைக் கொண்டு வராதீர்கள்” என்று பேசினார் ஆர்.கே.செல்வமணி.

தவறவிடாதீர்

'பிக் பாஸ் 3' வெற்றியாளர் வெளியிட்ட ரஜினி படம்: சர்ச்சையானதால் நீக்கினாரா?

நட்பு வட்டத்தில் அஞ்சலி, இந்துஜா!- அதுல்யா ரவி உற்சாக நேர்காணல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x