Published : 01 Feb 2020 04:56 PM
Last Updated : 01 Feb 2020 04:56 PM

'தர்பார்' படத்தை விட 'சைக்கோ' வசூல் அதிகம்: விநியோகஸ்தர் பேச்சால் பதறிய உதயநிதி ஸ்டாலின்

'தர்பார்' படத்தை விட 'சைக்கோ' படத்தின் வசூல் அதிகம் என்று விநியோகஸ்தர் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ராஜ், சிங்கம் புலி, அதிதி ராவ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சைக்கோ'. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தன்வீர் ஒளிப்பதிவு செய்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஐட்ரீம்ஸ் திரையரங்கம் சார்பில் மூர்த்தி பேசிய போது, "'தர்பார்' மற்றும் 'பட்டாஸ்' படங்கள் ஓடிக் கொண்டிருக்கும்போது, எங்களை மாதிரி ஒற்றை திரையரங்குகளில் அந்தப் படங்களின் காட்சிகளைக் குறைத்துவிட்டு ’சைக்கோ’ திரையிட்டோம்.

வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களுமே 'தர்பார்' மற்றும் 'பட்டாஸ்' வெளியான நாட்களில் இரண்டுக்குமே 80% ஃபுல்லான சூழலில், 'சைக்கோ' மூன்று நாட்களுமே ஹவுஸ் ஃபுல். இயக்குநர் - ஹீரோ இணைந்து நல்ல படம் பண்ணியிருந்தால் ஹிட்தான். 'தர்பார்' படத்தை வீழ்த்தி இந்தப் படம் சூப்பர் சக்சஸ் ஆகியுள்ளது. ஆகையால் உதயநிதி சாருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.

மூர்த்தி பேசும்போது உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

இந்தச் சந்திப்பில் இறுதியாக உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ஐட்ரீம்ஸ் மூர்த்தி பேசியதற்குப் பதிலளித்துப் பேசினார். "அவர் கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அதற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. எனக்கு ரஜினி சாருடைய படங்கள் மட்டும் ரொம்பப் பிடிக்கும்" என்றார் உதயநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x