Published : 30 Jan 2020 10:28 PM
Last Updated : 30 Jan 2020 10:28 PM

'தர்பார்' தோல்வி: விநியோகஸ்தர்களைச் சந்திப்பாரா ரஜினி?

'தர்பார்' படம் தோல்வியடைந்துள்ள நிலையில், நாளை விநியோகஸ்தர்களை ரஜினி சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்தப் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியானது. இதில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், ரஜினி படம் என்பதால் முதல் வாரத்தில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால், நாட்கள் போகப் போக படத்தின் வசூல் குறைந்து கொண்டே இருந்தது. இதனால், இந்தப் படம் விநியோகஸ்தர்களுக்கு தோல்வியில் முடிந்தது.

தனது படம் நஷ்டமடைந்தால், விநியோகஸ்தர்களை அழைத்துப் பேசி அவர்களுக்கான நஷ்டத் தொகையைச் சரி செய்யும் பழக்கமுடையவர் ரஜினி. 'தர்பார்' தங்களுக்கு நஷ்டமடைந்ததால் விநியோகஸ்தர்கள் ரஜினியைச் சந்திக்க சென்னை வந்தனர். முதலில் அவரைச் சந்திக்க போயஸ் கார்டனுக்குச் சென்றனர்.

இந்தத் தகவல் தெரிந்து, நாளை (ஜனவரி 31) அவர்களைச் சந்திப்பதாக ரஜினி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் இந்தச் சந்திப்பு நாளை நடைபெறுமா அல்லது தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அழைத்து அவர்களிடம் பேசுவார்களா என்பது விரைவில் தெரியவரும்.

இதன் மூலம் 'தர்பார்' படம் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x