Published : 29 Jan 2020 08:26 PM
Last Updated : 29 Jan 2020 08:26 PM

சாந்தனுவுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்

நெருக்கடியான காலகட்டத்தில் தனக்கு விஜய் கொடுத்த அட்வைஸ் குறித்து சாந்தனு அளித்துள்ள பேட்டியொன்றில் பேசியுள்ளார்.

நடிகர் விஜய்யின் மிகத் தீவிரமான ரசிகர் சாந்தனு. அவரது திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தவர் விஜய் தான். பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும், தனக்கான இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார். இப்போது 'வானம் கொட்டட்டும்', 'இராவணகோட்டம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தனக்கு நெருக்கடியான சூழ்நிலைகளில் விஜய் என்ன அட்வைஸ் கொடுத்தார், 'மாஸ்டர்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு எப்படியிருந்தது என்பதை தொலைக்காட்சி பேட்டியில் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார் சாந்தனு.,

அந்தப் பேட்டியில் சாந்தனு, " விஜய் அண்ணா. அனைவரிடமும் சகஜமாகத் தான் பழகுவார். அவருக்கு உங்களைத் தெரியும் என்றால் இன்னும் ஜாலியாக பழகுவார். அவரை நான் ஒரு சகோதரனாகத் தான் பார்க்கிறேன். அவரிடம் பணப்பிரச்சினை, படப்பிரச்சினை என அனைத்தையுமே பகிர்ந்து கொள்வேன்.

அப்படிப் பேசும் போது, "நண்பா.. வாழ்க்கையில் இதெல்லாம் இல்லாமல் எப்படி நண்பா. இதெல்லாம் தாண்டி வந்தால் தான் நினைத்த விஷயம் கிடைக்கும். மனதைத் தளர விடாதே" என்று தோளைத் தட்டிக் கொடுப்பார். எங்காவது ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தேன் என்றால், பின்னாடி வந்து தோளைத் தட்டி மெசேஜ் செய்துவிட்டு 'ஆல் ஒ.கே' என்று கேட்பார்.

'மாஸ்டர்' படத்துக்காக டெல்லியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் தான் எனக்கு அவருடன் முதல் நாள் ஷுட்டிங். அங்கு சென்றவுடன் திரும்பி நின்று கொண்டிருந்தார். பின்னால் போய் தோளைத் தட்டினேன். என்னை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டார். நீ இங்கு இருப்பது எனக்கு அவ்வளவு சந்தோஷம் என்ற அவர் நினைப்பது அந்த அரவணைப்பில் தெரிந்தது" என்று பேசியுள்ளார் சாந்தனு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x