Published : 28 Jan 2020 05:50 PM
Last Updated : 28 Jan 2020 05:50 PM

'பொன்னியின் செல்வன்’ படத்தை எம்ஜிஆர் இயக்கச் சொன்னார்: பாரதிராஜா 

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை எம்ஜிஆர் தன்னை இயக்கச் சொல்லிக் கேட்டதாக இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையைத் திரைப்படமாக்கும் முயற்சி பல்வேறு வருடங்களாகத் தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது. முதலில் 1958-ல் நடிகர் எம்ஜிஆர் அந்தப் படத்தைத் தயாரித்து நடிக்க முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. தொடர்ந்து எம்ஜிஆர் பொன்னியின் செல்வனைப் படமாக்க முயன்றதில் எதுவும் கைகூடவில்லை.

பின்னர் மணிரத்னமும், கமல்ஹாசனும் 'பொன்னியின் செல்வன்' படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். தற்போது கமல்ஹாசன் இல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களாகத் திரைப்படமாகி வருகிறது.

'மீண்டும் ஒரு மரியாதை' திரைப்படத்தின் விளம்பரங்களை ஒட்டி ஊடகங்களைச் சந்தித்து வருகிறார் இயக்குநர் பாரதிராஜா. அவர் பேசுகையில், " 'ஒரு கைதியின் டைரி' படத்தின் பொன்மானே கோபம் ஏனோ பாடல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது எம்ஜிஆர் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தார். 'யார் இதற்கு மாஸ்டர்' என்று கேட்டார். கூச்சத்துடன் நான்தான் என்றேன்.

அப்போது அவர் எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் 'பொன்னியின் செல்வன்' படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். என்னை அந்தப் படத்தை இயக்கச் சொன்னார். நான் அதிர்ச்சியாகிவிட்டேன். அவரிடம் நிதானமாக என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் 'நீ எனக்காக இயக்க வேண்டும். கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் அதில் நடிக்க வேண்டும்' என்றார்.

மூவரும் ஒப்புக்கொண்டோம். ஆனால், எம்ஜிஆரின் மறைவினால் அந்தப் படம் எடுக்கவில்லை. இல்லையென்றால் நான் 'பொன்னியின் செல்வன்' படத்தை எடுத்திருப்பேன். பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கதையைப் படித்த ஞாபகம் இருக்கிறது. அது ஒரு இதிகாசம். மணிரத்னம் எந்தப் பாணியில் எடுப்பார் என்று தெரியவில்லை. ஆனால், அதை எடுக்கும் திறன் அவரிடம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்

ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா - மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. அதே நேரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை அனிமேஷன் கதாபாத்திரங்களாக வைத்தும் ஒரு 'பொன்னியின் செல்வன்' கார்ட்டூன் வடிவில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x