Published : 25 Jan 2020 08:00 PM
Last Updated : 25 Jan 2020 08:00 PM

இது ஒரு நீளமான கடினமான பயணம்: வரலட்சுமி நெகிழ்ச்சி

இது ஒரு நீளமான கடினமான பயணம் என்று 25 படங்களைக் கடந்துள்ள வரலட்சுமி சரத்குமார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தவர், தற்போது 25 படங்களைக் கடந்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

அதில் வரலட்சுமி சரத்குமார், "இது ஒரு நீளமான கடினமான பயணமாக இருந்துள்ளது. நல்ல விஷயங்களை அடைவது அவ்வளவு சுலபமல்ல என்பார்கள். அது என் விஷயத்தில் உண்மை. ஆனால், கனவுகள் கண்டிப்பாக ஒரு நாள் நிஜமாகும். எனது சிறந்த திறனில் நான் வேலை செய்திருக்கிறேன். என் வாழ்க்கையில் இந்த கட்டத்தை எட்ட நான் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். இப்போது நான் 25 படங்களை முடித்திருக்கிறேன் என்று நினைப்பது எனக்குப் பெரிய அளவுகோலாகத் தெரிகிறது.

என்ன நடந்தாலும் என்னுடன் நின்ற என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். என் பக்கம் நின்று என் ஊக்கத்தைத் தடுத்தவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். ஏனென்றால் உங்கள் எதிர்மறை எண்ணம் தான் என்னை வலிமையாக்கியது. உங்களைத் தவறென்று நிரூபிக்க இன்னும் பிடிவாதம் பிடிக்க வைத்தது. என்னை ஆதரித்த அன்பு காட்டிய என்னுடன் வளர்ந்த என் அன்பார்ந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

என் மீது கட்டுப்பாடில்லாத நம்பிக்கை வைத்த என் அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். நிறைய அன்பு, மகிழ்ச்சி, வெற்றியென என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். என் நல்லது கெட்டதுக்கு நடுவில் என்னுடனேயே இருந்த எனது ஒப்பனைக் கலைஞர் ரமேஷ் அண்ணாவுக்கும் என் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். 25 படங்களை முடித்ததை நான் ஆசீர்வாதமாக உணர்கிறேன். என்னுடன் இருந்த அனைத்து பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு என் நன்றி.

என்றும் என் பணியில் சிறந்து விளங்க முயற்சிப்பேன். எனது சிறந்த நடிப்பைத் தந்து உங்களுக்குச் சிறந்த பொழுதுபோக்குத் தர என்னை அர்ப்பணிப்பேன். தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கும். தொடர்ந்து கனவு காணுங்கள். உங்களால் முடிந்த அத்தனை அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்புங்கள்" என்று தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x